திருநாரையூர் – அப்பர் தேவாரம் (1):

<– திருநாரையூர்

(1)
வீறு தானுடை வெற்பன் மடந்தையோர்
கூறனாகிலும், கூன்பிறை சூடிலும்
நாறு பூம்பொழில் நாரையூர் நம்பனுக்கு
ஆறு சூடலும் அம்ம அழகிதே
(2)
புள்ளி கொண்ட புலியுரி ஆடையும்
வெள்ளி கொண்ட வெண்பூதி மெய்யாடலும்
நள்ளி தெண்திரை நாரையூரான் நஞ்சை
அள்ளி உண்டலும் அம்ம அழகிதே
(3)
வேடு தங்கிய வேடமும், வெண்தலை
ஓடு தங்கிய உண்பலி கொள்கையும்
நாடு தங்கிய நாரையூரான் நடம்
ஆடு பைங்கழல் அம்ம அழகிதே
(4)
கொக்கின் தூவலும், கூவிளங்கண்ணியும்
மிக்க வெண்தலை மாலை விரிசடை
நக்கனாகிலும் நாரையூர் நம்பனுக்கு
அக்கின் ஆரமும் அம்ம அழகிதே
(5)
வடிகொள் வெண்மழு மானமர் கைகளும்
பொடிகொள் செம்பவளம் புரை மேனியும்
நடிகொள் நன்மயில் சேர் திருநாரையூர்
அடிகள் தம்அடி அம்ம அழகிதே
(6)
சூலம் மல்கிய கையும், சுடரொடு
பாலும் நெய்தயிராடிய பான்மையும்
ஞாலம் மல்கிய நாரையூர் நம்பனுக்கு
ஆல நீழலும் அம்ம அழகிதே
(7)
பண்ணினால் மறை பாடலோடு ஆடலும்
எண்ணிலார் புரமூன்றெரி செய்ததும்
நண்ணினார் துயர் தீர்த்தலும் நாரையூர்
அண்ணலார் செய்கை அம்ம அழகிதே
(8)
என்பு பூண்டு எருதேறி, இளம்பிறை
மின் புரிந்த சடைமேல் விளங்கவே
நன்பகல் பலி தேரினும் நாரையூர்
அன்பனுக்கது அம்ம அழகிதே
(9)
முரலும் கின்னர மொந்தை முழங்கவே
இரவில் நின்றெரி ஆடலும், நீடுலாம்
நரலும் வாரிநல் நாரையூர் நம்பனுக்கு
அரவும் பூணுதல் அம்ம அழகிதே
(10)
கடுக்கையம் சடையன் கயிலைம் மலை
எடுத்த வாளரக்கன் தலை ஈரைஞ்சும்
நடுக்கம் வந்திற நாரையூரான் விரல்
அடுத்த தன்மையும் அம்ம அழகிதே

 

திருநாரையூர் – சம்பந்தர் தேவாரம் (3):

<– திருநாரையூர்

(1)
கடலிடை வெங்கடு நஞ்சமுண்ட கடவுள், விடையேறி
உடலிடையில் பொடிப் பூசவல்லான், உமையோடு ஒருபாகன்
அடலிடையில் சிலை தாங்கிஎய்த அம்மான், அடியார்மேல்
நடலை வினைத்தொகை தீர்த்துகந்தான் இடம் நாரையூர் தானே
(2)
விண்ணின் மின்னேர் மதி, துத்திநாகம், விரிபூமலர்க் கொன்றை
பெண்ணின் முன்னே மிக வைத்துகந்த பெருமான், எரியாடி
நண்ணிய தன்அடியார்களோடும் திருநாரையூரான் என்று
எண்ணுமின், நும்வினை போகும் வண்ணம் இறைஞ்சும் நிறைவாமே
(3)
தோடொரு காது, ஒருகாது சேர்ந்த குழையான், இழை தோன்றும்
பீடொரு கால் பிரியாது நின்ற பிறையான், மறையோதி
நாடொரு காலமும் சேர நின்ற திருநாரையூரானைப்
பாடுமினீர் பழி போகும் வண்ணம், பயிலும் உயர்வாமே
(4)
வெண்ணிலவம் சடைசேர வைத்து, விளங்கும் தலையேந்திப்
பெண்ணில் அமர்ந்தொரு கூறதாய பெருமான், அருளார்ந்த
அண்ணல் மன்னியுறை கோயிலாகும் அணிநாரையூர் தன்னை
நண்ணல் அமர்ந்து உறவாக்குமின்கள் நடலை கரிசறுமே
(5)
வானமர் தீவளி நீர்நிலனாய் வழங்கும் பழியாகும்
ஊனமர் இன்னுயிர் தீங்குகுற்ற முறைவால் பிறிதின்றி
நானமரும் பொருளாகி நின்றான் திருநாரையூர் எந்தை
கோனவனைக் குறுகக் குறுகா கொடுவல் வினைதானே
(6)
கொக்கிறகும் குளிர் சென்னி மத்தம் குலாய மலர்சூடி
அக்கரவோடரை ஆர்த்துகந்த அழகன், குழகாக
நக்கமரும் திருமேனியாளன், திருநாரையூர் மேவிப்
புக்கமரும் மனத்தோர்கள் தம்மைப் புணரும் புகல்தானே
(7)
ஊழியும் இன்பமும் காலமாகி, உயரும் தவமாகி
ஏழிசையின் பொருள், வாழும் வாழ்க்கை வினையின் புணர்ப்பாகி
நாழிகையும் பல ஞாயிறாகி, நளிர் நாரையூர் தன்னில்
வாழியர் மேதகு மைந்தர் செய்யும் வகையின் விளைவாமே
(8)
கூசமிலாத அரக்கன் வரையைக் குலுங்க எடுத்தான் தோள்
நாசமதாகி இறஅடர்த்த விரலான், கரவாதார்
பேச வியப்பொடு பேணநின்ற பெரியோன் இடம் போலும்
தேசமுறப் புகழ் செம்மை பெற்ற திருநாரையூர் தானே
(9)
பூமகனும், அவனைப் பயந்த புயலார் நிறத்தானும்
ஆமளவும் திரிந்தேத்திக் காண்டலறிதற்கு அரியான்ஊர்
பாமருவும் குணத்தோர்கள் ஈண்டிப் பலவும் பணிசெய்யும்
தேமருவும் திகழ் சோலை சூழ்ந்த திருநாரையூர் தானே
(10)
வெற்றரையாகிய வேடங்காட்டித் திரிவார், துவராடை
உற்றரையோர்கள் உரைக்கும் சொல்லை உணராது எழுமின்கள்
குற்றமிலாததோர் கொள்கை எம்மான் குழகன் தொழிலாரப்
பெற்று அரவாட்டிவரும் பெருமான் திருநாரையூர் சேர்வே
(11)
பாடியலும் திரைசூழ் புகலித் திருஞான சம்பந்தன்
சேடியலும் புகழோங்கு செம்மைத் திருநாரையூரான் மேல்
பாடிய தண்தமிழ் மாலை பத்தும் பரவித் திரிந்தாக
வாடிய சிந்தையினார்க்கு நீங்கும் அவலக் கடல்தானே

 

திருநாரையூர் – சம்பந்தர் தேவாரம் (2):

<– திருநாரையூர்

(1)
காம்பினை வென்ற மென்தோளி பாகம் கலந்தான், அலந்தாங்கு
தேம்புனல் சூழ்திகழ் மாமடுவில் திருநாரையூர் மேய
பூம்புனல் சேர் புரிபுன் சடையான், புலியின் உரிதோல் மேல்
பாம்பினை வீக்கிய பண்டரங்கன் பாதம் பணிவோமே
(2)
தீவினையாயின தீர்க்க நின்றான், திருநாரையூர் மேயான்
பூவினை மேவு சடைமுடியான், புடைசூழப் பலபூதம்
ஆவினில் ஐந்தும் கொண்டு ஆட்டுகந்தான், அடங்கார் மதில்மூன்றும்
ஏவினை எய்தழித்தான் கழலே பரவா எழுவோமே
(3)
மாயவன் சேயவன் வெள்ளியவன், விடஞ்சேரு மைமிடற்றன்
ஆயவனாகிஒர் அந்தரமும் அவனென்று, வரைஆகம்
தீயவன் நீரவன் பூமியவன், திருநாரையூர் தன்னில்
மேயவனைத் தொழுவார்அவர் மேல் வினையாயின வீடுமே
(4)
துஞ்சிருளாடுவர், தூமுறுவல் துளங்கும் உடம்பினராய்
அஞ்சுடரார் எரியாடுவர், ஆர்அழலார் விழிக்கண்
நஞ்சுமிழ் நாகம் அரைக்கசைப்பர், நலனோங்கு நாரையூர்
எஞ்சிவனார்க்கு அடிமைப் படுவார்க்கு இனியில்லை ஏதமே
(5)
பொங்கிளம் கொன்றையினார், கடலில் விடமுண்டு இமையோர்கள்
தங்களை ஆரிடர் தீர நின்ற தலைவர், சடைமேலோர்
திங்களை வைத்து அனலாடலினார், திருநாரையூர் மேய
வெங்கனல் வெண்ணீறணிய வல்லார் அவரே விழுமியரே
(6)
பாருறுவாய் மையினார் பரவும் பரமேட்டி, பைங்கொன்றைத்
தாருறு மார்புடையான், மலையின் தலைவன், மலைமகளைச்
சீருறும், மாமறுகில் சிறைவண்டறையும் திருநாரை
ஊருறைஎம் இறைவர்க்கிவை ஒன்றொடொன்று ஒவ்வாவே
(7)
கள்ளி இடுதலை ஏந்து கையர், கரிகாடர், கண்ணுதலர்
வெள்ளிய கோவண ஆடை தன்மேல் மிளிர் ஆடரவார்த்து
நள்ளிருள் நட்டமதாடுவர், நன்னலன் ஓங்கு நாரையூர்
உள்ளிய போழ்தில் எம்மேல்வரு வல்வினையாயின ஓடுமே
(8)
நாமமெனைப் பலவும் உடையான், நலனோங்கு நாரையூர்
தாமொம் எனப் பறையாழ் குழல் தாளார் கழல்பயில
ஈம விளக்கெரி சூழ்சுடலை இயம்பும் இடுகாட்டில்
சாமமுரைக்க நின்றாடுவானும் தழலாய சங்கரனே
(9)
ஊனுடை வெண்தலை கொண்டுழல்வான், ஒளிர்புன் சடைமேலோர்
வானிடை வெண்மதி வைத்துகந்தான், வரிவண்டு யாழ்முரலத்
தேனுடை மாமலர் அன்னம்வைகும் திருநாரையூர் மேய
ஆனிடை ஐந்துகந்தான் அடியே பரவா அடைவோமே
(10)
தூசுபுனை துவராடை மேவும் தொழிலார், உடம்பினிலுள்
மாசு புனைந்து உடை நீத்தவர்கள் மயல்நீர்மை கேளாதே
தேசுடையீர்கள் தெளிந்தடைமின் திருநாரையூர் தன்னில்
பூசுபொடித் தலைவர் அடியார் அடியே பொருத்தமே
(11)
தண்மதி தாழ்பொழில் சூழ் புகலித் தமிழ்ஞான சம்பந்தன்
ஒண்மதி சேர் சடையான் உறையும் திருநாரையூர் தன்மேல்
பண்மதியால் சொன்ன பாடல் பத்தும் பயின்றார் வினைபோகி
மண்மதியாது போய் வான்புகுவர் வானோர் எதிர்கொளவே

 

திருக்கருப்பறியலூர் – சுந்தரர் தேவாரம்:

<– திருக்கருப்பறியலூர்

 

(1)
சிம்மாந்து சிம்புளித்துச் சிந்தையினில் வைத்துகந்து
திறம்பா வண்ணம்
கைம்மாவின் உரிவை போர்த்து உமைவெருவக் கண்டானைக்
கருப்பறியலூர்க்
கொய்ம்மாவின் மலர்ச்சோலைக் குயில்பாட மயிலாடும்
கொகுடிக் கோயில்
எம்மானை, மனத்தினால் நினைந்த போது அவர்நமக்கு இனியவாறே

(2)
நீற்றாரும் மேனியராய், நினைவார்தம் உள்ளத்தே
நிறைந்து தோன்றும்
காற்றானைத் தீயானைக் கதிரானை மதியானைக்
கருப்பறியலூர்க்
கூற்றானை, கூற்றுதைத்துக் கோல் வளையாள் அவளோடும்
கொகுடிக் கோயில்
ஏற்றானை, மனத்தினால் நினைந்தபோது அவர்நமக்கு இனியவாறே

(3)
முட்டாமே நாள்தோறும் நீர்மூழ்கிப் பூப்பறித்து
மூன்று போதும்
கட்டார்ந்த இண்டை கொண்டு அடிசேர்த்தும் அந்தணர்தம்
கருப்பறியலூர்க்
கொட்டாட்டுப் பாட்டாகி நின்றானைக், குழகனைக்
கொகுடிக் கோயில்
எட்டான மூர்த்தியை நினைந்தபோது அவர்நமக்கு இனியவாறே

(4)
விருந்தாய சொல்மாலை கொண்டேத்தி வினைபோக
வேலி தோறும்
கருந்தாள வாழைமேல் செங்கனிகள் தேன்சொரியும்
கருப்பறியலூர்க்
குருந்தாய முள்ளெயிற்றுக் கோல்வளையாள் அவளோடும்
கொகுடிக் கோயில்
இருந்தானை, மனத்தினால்  நினைந்தபோது அவர்நமக்கு
இனியவாறே

(5)
பொடியேறு திருமேனிப் பெருமானைப், பொங்கரவக்
கச்சையானைக்
கடிநாறும் பூம்பொய்கைக் கயல்வாளை குதிகொள்ளும்
கருப்பறியலூர்க்
கொடியேறி வண்டினமும் தண்தேனும் பண்செய்யும்
கொகுடிக் கோயில்
அடியேறு கழலானை நினைந்தபோது அவர்நமக்கு
இனியவாறே

(6)
பொய்யாத வாய்மையால் பொடிபூசிப் போற்றிசைத்துப்
பூசை செய்து
கையினால் எரியோம்பி மறைவளர்க்கும் அந்தணர்தம்
கருப்பறியலூர்க்
கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ மயிலாலும்
கொகுடிக் கோயில்
ஐயனை, என் மனத்தினால் நினைந்தபோது அவர்நமக்கு
இனியவாறே

(7)
செடிகொள் நோய் உள்ளளவும் தீவினையும் தீர்ந்தொழியச்
சிந்தை செய்மின்
கடிகொள் பூந்தட மண்டிக் கருமேதி கண்படுக்கும்
கருப்பறியலூர்க்
கொடிகொள்பூ நுண்ணிடையாள் கோல்வளையாள் அவளோடும்
கொகுடிக் கோயில்
அடிகளை, என் மனத்தினால் நினைந்தபோது அவர்நமக்கு
இனியவாறே

(8)
பறையாத வல்வினைகள் பறைந்தொழியப் பன்னாளும்
பாடியாடிக்
கறையார்ந்த கண்டத்தன் எண்தோளன் முக்கண்ணன்
கருப்பறியலூர்க்
குறையாத மறைநாவர் குற்றேவல் ஒழியாத
கொகுடிக் கோயில்
உறைவானை, மனத்தினால் நினைந்தபோது அவர்நமக்கு
இனியவாறே

(9)
சங்கேந்து கையானும், தாமரையின் மேலானும்
தன்மை காணாக்
கங்கார்ந்த வார்சடைகள் உடையானை, விடையானைக்
கருப்பறியலூர்க்
கொங்கார்ந்த பொழிற்சோலை சூழ்கனிகள் பலஉதிர்க்கும்
கொகுடிக் கோயில்
எங்கோனை, மனத்தினால் நினைந்த போது அவர்நமக்கு
இனியவாறே.

(10)
பண்டாழின் இசைமுரலப் பன்னாளும் பாவித்துப்
பாடியாடிக்
கண்டார்தம் கண்குளிரும் களிக்க முகம் பூஞ்சோலைக்
கருப்பறியலூர்க்
குண்டாடும் சமணரும் சாக்கியரும் புறங்கூறும்
கொகுடிக் கோயில்
எண்தோள்எம் பெருமானை நினைந்த போது அவர்நமக்கு
இனியவாறே.

(11)
கலைமலிந்த தென்புலவர் கற்றோர்தம் இடர்தீர்க்கும்
கருப்பறியலூர்க்
குலைமலிந்த கோட்டெங்கும் மட்டொழுகும் பூஞ்சோலைக்
கொகுடிக் கோயில்
இலைமலிந்த மழுவானை, மனத்தினால் அன்புசெய்து
இன்பமெய்தி
மலைமலிந்த தோல் ஊரன் வனப்பகைஅப்பன் உரைத்த
வண்தமிழ்களே

 

 

திருநாரையூர் – சம்பந்தர் தேவாரம் (1):

<– திருநாரையூர்

(1)
உரையினில் வந்தபாவம், உணர் நோய்கள், உம்ம செயல்தீங்கு குற்றம் உலகில்
வரையில்நிலாமை செய்தஅவை தீரும், வண்ண மிகஏத்தி நித்த நினைமின்
வரைசிலையாக அன்று மதில் மூன்றெரித்து, வளர்கங்குல் நங்கை வெருவத்
திரையொலி நஞ்சமுண்ட சிவன்மேய செல்வத் திருநாரையூர் கைதொழவே
(2)
ஊனடைகின்ற குற்ற முதலாகி, உற்ற பிணிநோய் ஒருங்கும், உயரும்
வானடைகின்ற வெள்ளை மதிசூடு சென்னி, விதியான வேத விகிர்தன்
கானிடையாடி, பூதப் படையான், இயங்கு விடையான், இலங்கு முடிமேல்
தேனடை வண்டுபாடு சடை அண்ணல் நண்ணு திருநாரையூர் கைதொழவே
(3)
ஊரிடை நின்றுவாழும் உயிர்செற்ற காலன் துயருற்ற தீங்கு விரவிப்
பாரிடை மெள்ளவந்து பழியுற்ற வார்த்தை ஒழிவுற்ற வண்ணம் அகலும்
போரிடை அன்றுமூன்று மதிலெய்த ஞான்று, புகழ் வானுளோர்கள் புணரும்
தேரிடை நின்ற எந்தை பெருமான் இருந்த திருநாரையூர் கைதொழவே
(4)
தீயுறவாய ஆக்கை, அதுபற்றி வாழும் வினை செற்றவுற்ற உலகின்
தாயுறு தன்மையாய தலைவன் தன் நாமம் நிலையாக நின்று மருவும்
பேயுறவாய கானில் நடமாடி, கோல விடமுண்ட கண்டன், முடிமேல்
தேய்பிறை வைத்துகந்த சிவன்மேய செல்வத் திருநாரையூர் கை தொழவே
(5)
வசை அபராதமாய உவரோதம் நீங்கும், தவமாய தன்மை வரும், வான்
மிசையவர் ஆதியாய திருமார்பிலங்கு விரிநூலர், விண்ணு நிலனும்
இசையவர், ஆசிசொல்ல இமையோர்கள் ஏத்தி, அமையாத காதலொடுசேர்
திசையவர் போற்றநின்ற சிவன்மேய செல்வத் திருநாரையூர் கைதொழவே
(6)
உறைவளர் ஊனிலாய உயிர்நிற்கும் வண்ணம் உணர்வாக்கும், உண்மையுலகில்
குறைவுளவாகி நின்ற குறைதீர்க்கும், நெஞ்சில் நிறைவாற்று நேசம் வளரும்
மறைவளர் நாவன், மாவின் உரிபோர்த்த மெய்யன், அரவார்த்த அண்ணல் கழலே
திறைவளர் தேவர் தொண்டின் அருள்பேண நின்ற திருநாரையூர் கைதொழவே
(7)
தனம்வரும், நன்மையாகும், தகுதிக்குழந்து வருதிக்குழன்ற உடலின்
இனம்வளர் ஐவர்செய்யும் வினயங்கள் செற்று நினைவொன்றும், சிந்தை பெருகும்
முனமொரு காலம் மூன்றுபுரம் வெந்து மங்கச் சரமுன்றெரிந்த அவுணர்
சினமொரு காலழித்த சிவன்மேய செல்வத் திருநாரையூர் கைதொழவே
(8)
உருவரைகின்ற நாளில் உயிர்கொள்ளும் கூற்ற நனியஞ்சும், ஆதலுறநீர்
மருமலர் தூவியென்றும் வழிபாடு செய்ம்மின், இழிபாடிலாத கடலின்
அருவரை சூழிலங்கை அரையன் தன்வீரம் அழியத் தடக்கை முடிகள்
திருவிரல் வைத்துகந்த சிவன்மேய செல்வத் திருநாரையூர் கைதொழவே
(9)
வேறுயர் வாழ்வு தன்மை, வினைதுக்கம் மிக்க பகை தீர்க்கும், மேய வுடலில்
தேறிய சிந்தை வாய்மை தெளிவிக்க நின்ற கரவைக் கரந்து திகழும்
சேறுயர் பூவின்மேய பெருமானும், மற்றைத் திருமாலும் நேட எரியாய்ச்
சீறிய செம்மையாகும் சிவன்மேய செல்வத் திருநாரையூர் கைதொழவே
(10)
மிடைபடும் துன்பம், இன்பம் உளதாக்கும், உள்ளம் வெளியாக்கும், உன்னியுணரும்
படையொரு கையிலேந்திப் பலிகொள்ளும் வண்ணம் ஒலி பாடியாடி, பெருமை
உடையினை விட்டுளோரும், உடல்போர்த்துளோரும் உரைமாயும் வண்ணமழியச்
செடிபட வைத்துகந்த சிவன்மேய செல்வத் திருநாரையூர் கைதொழவே
(11)
எரியொரு வண்ணமாய உருவானை, எந்தை பெருமானை, உள்கி நினையார்
திரிபுரம் அன்றுசெற்ற சிவன்மேய செல்வத் திருநாரையூர் கைதொழுவான்
பொருபுனல் சூழ்ந்த காழி மறைஞான பந்தன் உரைமாலை பத்து மொழிவார்
திருவளர் செம்மையாகி அருள்பேறு மிக்கதுளதென்பர் செம்மையினரே

 

திருநீடூர் – சுந்தரர் தேவாரம்:

<– திருநீடூர்

(1)
ஊர்வதோர் விடை ஒன்றுடையானை
    ஒண்ணுதல் தனிக் கண்ணுதலானைக்
காரதார் கறைமா மிடற்றானைக்
    கருதலார் புரம் மூன்றெரித்தானை
நீரில் வாளை வரால் குதிகொள்ளும்
    நிறைபுனல் கழனிச் செல்வ நீடூர்ப்
பாருளார் பரவித்தொழ நின்ற
    பரமனைப் பணியா விடலாமே
(2)
துன்னு வார்சடைத் தூமதியானைத்
    துயக்குறா வகை தோன்றுவிப்பானைப்
பன்னு நான்மறை பாடவல்லானைப்
    பார்த்தனுக்கருள் செய்த பிரானை
என்னை இன்னருள் எய்துவிப்பானை
    ஏதிலார் தமக்கு ஏதிலன் தன்னைப்
புன்னை மாதவி போதலர் நீடூர்ப்
    புனிதனைப் பணியா விடலாமே
(3)
கொல்லும் மூவிலை வேலுடையானைக்
    கொடிய காலனையும் குமைத்தானை
நல்லவா நெறி காட்டுவிப்பானை
    நாளும் நாம் உகக்கின்ற பிரானை
அல்லலில் அருளே புரிவானை
    ஆடு நீர்வயல் சூழ்புனல் நீடூர்க்
கொல்லை வெள்ளெருதேற வல்லானைக்
    கூறி நாம் பணியா விடலாமே
(4)
தோடு காதிடு தூநெறியானைத்
    தோற்றமும் துறப்பாயவன் தன்னைப்
பாடு மாமறை பாட வல்லானைப்
    பைம்பொழில் குயில் கூவிட மாடே
ஆடு மாமயில் அன்னமொடு ஆட
    அலைபுனல் கழனித் திருநீடூர்
வேடனாய பிரானவன் தன்னை
    விரும்பி நாம் பணியா விடலாமே
(5)
குற்றமொன்று அடியார் இலரானால்
    கூடுமாறு தனைக் கொடுப்பானைக்
கற்ற கல்வியிலும் இனியானைக்
    காணப் பேணும் அவர்க்கெளியானை
முற்ற அஞ்சும் துறந்திருப்பானை
    மூவரின் முதலாயவன் தன்னைச்
சுற்று நீர்வயல் சூழ்திரு நீடூர்த்
    தோன்றலைப் பணியா விடலாமே
(6)
காடிலாடிய கண்ணுதலானைக்
    காலனைக் கடிந்திட்ட பிரானைப்
பாடியாடும் பரிசே புரிந்தானைப்
    பற்றினோடு சுற்றம் ஒழிப்பானைத்
தேடி மாலயன் காண்பரியானைச்
    சித்தமும் தெளிவார்க்கெளியானைக்
கோடி தேவர்கள் கும்பிடு நீடூர்க்
    கூத்தனைப் பணியா விடலாமே
(7)
விட்டிலங்கெரியார் கையினானை
    வீடிலாத வியன் புகழானைக்
கட்டுவாங்கம் தரித்த பிரானைக்
    காதிலார் கனகக் குழையானை
விட்டிலங்கு புரிநூல் உடையானை
    வீந்தவர் தலையோடு கையானைக்
கட்டியின் கரும்போங்கிய நீடூர்க்
    கண்டு நாம் பணியா விடலாமே
(8)
மாயமாய மனம் கெடுப்பானை
    மனத்துளே மதியாய் இருப்பானைக்
காய மாயமும் ஆக்குவிப்பானைக்
    காற்றுமாய்க் கனலாய்க் கழிப்பானை
ஓயுமாறுறு நோய் புணர்ப்பானை
    ஒல்லை வல்வினைகள் கெடுப்பானை
வேய்கொள் தோள் உமைபாகனை, நீடூர்
    வேந்தனைப் பணியா விடலாமே
(9)
கண்டமும் கறுத்திட்ட பிரானைக்
    காணப் பேணும் அவர்க்கெளியானைத்
தொண்டரைப் பெரிதும் உகப்பானைத்
    துன்பமும் துறந்து இன்பினியானைப்
பண்டை வல்வினைகள் கெடுப்பானைப்
    பாக மாமதி ஆனவன் தன்னைக்
கெண்டை வாளை கிளர்புனல் நீடூர்க்
    கேண்மையால் பணியா விடலாமே
(10)
அல்லல் உள்ளன தீர்த்திடுவானை
    அடைந்தவர்க்கு அமுதாயிடுவானைக்
கொல்லை வல்லரவம் அசைத்தானைக்
    கோலமார் கரியின் உரியானை
நல்லவர்க்கணியானவன் தன்னை
    நானும் காதல் செய்கின்ற பிரானை
எல்லி மல்லிகையே கமழ் நீடூர்
    ஏத்தி நாம் பணியா விடலாமே
(11)
பேரோர் ஆயிரமும் உடையானைப்
    பேசினால் பெரிதும் இனியானை
நீரூர் வார்சடை நின்மலன் தன்னை
    நீடூர் நின்றுகந்திட்ட பிரானை
ஆரூரன்அடி காண்பதற்கன்பாய்
    ஆதரித்து அழைத்திட்ட இம்மாலை
பாரூரும் பரவித் தொழவல்லார்
    பத்தராய் முத்தி தாம் பெறுவாரே

 

திருப்பழனம் – அப்பர் தேவாரம் (6):

<– திருப்பழனம்

 

(1)
ஒன்றுகொலாம் அவர் சிந்தை உயர்வரை
ஒன்றுகொலாம் உயரும் மதி சூடுவர்
ஒன்றுகொலாம் இடு வெண்தலை கையது
ஒன்றுகொலாம் அவர் ஊர்வது தானே
(2)
இரண்டுகொலாம் இமையோர் தொழு பாதம்
இரண்டுகொலாம் இலங்குங்குழை பெண்ணாண்
இரண்டுகொலாம் உருவம் சிறுமான் மழு
இரண்டுகொலாம் அவர் எய்தின தாமே
(3)
மூன்றுகொலாம் அவர் கண்ணுதல்ஆவன
மூன்றுகொலாம் அவர் சூலத்தின் மொய்யிலை
மூன்றுகொலாம் கணை கையது வில்நாண்
மூன்றுகொலாம் புரமெய்தன தாமே
(4)
நாலுகொலாம் அவர் தம்முகம் ஆவன
நாலுகொலாம் சனனம் முதல் தோற்றமும்
நாலுகொலாம் அவர் ஊர்தியின் பாதங்கள்
நாலுகொலாம் மறைபாடின தாமே
(5)
அஞ்சுகொலாம் அவர் ஆடரவின் படம்
அஞ்சுகொலாம் அவர் வெல் புலனாவன
அஞ்சுகொலாம் அவர் காயப்பட்டான் கணை
அஞ்சுகொலாம் அவர் ஆடின தாமே
(6)
ஆறுகொலாம் அவர் அங்கம் படைத்தன
ஆறுகொலாம் அவர்தம் மகனார் முகம்
ஆறுகொலாம் அவர் தார்மிசை வண்டின்கால்
ஆறுகொலாம் சுவையாக்கின தாமே
(7)
ஏழுகொலாம் அவர் ஊழி படைத்தன
ஏழுகொலாம் அவர் கண்ட இருங்கடல்
ஏழுகொலாம் அவர் ஆளும் உலகங்கள்
ஏழுகொலாம் இசையாக்கின தாமே
(8)
எட்டுக்கொலாம் அவர் ஈறில் பெருங்குணம்
எட்டுக்கொலாம் அவர் சூடும் இனமலர்
எட்டுக்கொலாம் அவர் தோளிணை ஆவன
எட்டுக்கொலாம் திசையாக்கின தாமே
(9)
ஒன்பது போல் அவர் வாசல் வகுத்தன
ஒன்பது போல் அவர் மார்பினில் நூலிழை
ஒன்பது போல் அவர் கோலக் குழற்சடை
ஒன்பது போல் அவர் பாரிடம் தானே
(10)
பத்துக்கொலாம் அவர் பாம்பின்கண் பாம்பின்பல்
பத்துக்கொலாம் எயிறும் நெரிந்துக்கன
பத்துக்கொலாம் அவர் காயப்பட்டான் தலை
பத்துக்கொலாம் அடியார் செய்கை தானே

 

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page