திருப்பழனம் – அப்பர் தேவாரம் (1):

<– திருப்பழனம்

(1)
ஆடினார் ஒருவர் போலும், மலர்கமழ் குழலினாளைக்
கூடினார் ஒருவர் போலும், குளிர்புனல் வளைந்த திங்கள்
சூடினார் ஒருவர் போலும், தூயநன் மறைகள் நான்கும்
பாடினார் ஒருவர் போலும் பழனத்தெம் பரமனாரே
(2)
போவதோர் நெறியுமானார், புரிசடைப் புனிதனார், நான்
வேவதோர் வினையில் பட்டு வெம்மைதான் விடவும் கில்லேன்
கூவல்தான் அவர்கள் கேளார், குணமிலா ஐவர் செய்யும்
பாவமே தூர நின்றார் பழனத்தெம் பரமனாரே
(3)
கண்டராய் முண்டராகிக் கையிலோர் கபாலமேந்தித்
தொண்டர்கள் பாடியாடித் தொழுகழல் பரமனார்தாம்
விண்டவர் புரங்கள் எய்த வேதியர், வேத நாவர்
பண்டைஎன் வினைகள் தீர்ப்பார் பழனத்தெம் பரமனாரே
(4)
நீரவன் தீயினோடு நிழலவன் எழிலதாய
பாரவன் விண்ணின் மிக்க பரமவன் பரமயோகி
ஆரவன் அண்டமிக்க திசையினோடெளிகளாகிப்
பாரகத்தமிழ்தம் ஆனார் பழனத்தெம் பரமனாரே
(5)
ஊழியார் ஊழிதோறும் உலகினுக்கொருவராகிப்
பாழியார் பாவம் தீர்க்கும் பராபரர் பரமதாய
ஆழியான் அன்னத்தானும் அன்றவர்க்களப்பரிய
பாழியார் பரவியேத்தும் பழனத்தெம் பரமனாரே
(6)
ஆலின்கீழ் அறங்கள் எல்லாம் அன்றவர்க்கருளிச் செய்து
நூலின்கீழ் அவர்கட்கெல்லா நுண்பொருளாகி நின்று
காலின்கீழ்க் காலன் தன்னைக் கடுகத்தான் பாய்ந்து பின்னும்
பாலின்கீழ் நெய்யுமானார் பழனத்தெம் பரமனாரே
(7)
ஆதித்தன் அங்கி சோமன் அயனொடு மால் புதன்னும்
போதித்து நின்றுலகில் போற்றிசைத்தார் இவர்கள்
சோதித்தார் ஏழுலகும் சோதியுள் சோதியாகிப்
பாதிப்பெண் உருவமானார் பழனத்தெம் பரமனாரே
(8)
காற்றனால் காலற் காய்ந்து, காருரி போர்த்த ஈசர்
தோற்றனார் கடலுள் நஞ்சைத், தோடுடைக் காதர், சோதி
ஏற்றினார் இளவெண் திங்கள் இரும்பொழில் சூழ்ந்த காயம்
பாற்றினார் வினைகள் எல்லாம் பழனத்தெம் பரமனாரே
(9)
கண்ணனும் பிரமனோடு காண்கிலராகி வந்தே
எண்ணியும் துதித்தும் ஏத்த எரியுருவாகி நின்று
வண்ணநன் மலர்கள் தூவி வாழ்த்துவார் வாழ்த்தியேத்தப்
பண்ணுலாம் பாடல் கேட்டார் பழனத்தெம் பரமனாரே
(10)
குடையுடை அரக்கன் சென்று குளிர்கயிலாய வெற்பின்
இடை மடவரலை அஞ்ச எடுத்தலும் இறைவ நோக்கி
விடையுடை விகிர்தன் தானும் விரலினால் ஊன்றி மீண்டும்
படைகொடை அடிகள் போலும் பழனத்தெம் பரமனாரே

 

திருப்பழனம் – அப்பர் தேவாரம் (2):

<– திருப்பழனம்

(1)
சொல்மாலை பயில்கின்ற குயிலினங்காள் சொல்லீரே
பன்மாலை வரிவண்டு பண்மிழற்றும் பழனத்தான்
முன்மாலை நகுதிங்கள் முகிழ்விளங்கு முடிச்சென்னிப்
பொன்மாலை மார்பன்என் புதுநலம் உண்டிகழ்வானோ
(2)
கண்டகங்காள் முண்டகங்காள் கைதைகாள் நெய்தல்காள்
பண்டரங்க வேடத்தான், பாட்டோவாப் பழனத்தான்
வண்டுலாம் தடமூழ்கி மற்றவனென் தளிர் வண்ணம்
கொண்டநாள் தான் அறிவான் குறிக்கொள்ளாதொழிவானோ
(3)
மனைக்காஞ்சி இளங்குருகே மறந்தாயோ, மதமுகத்த
பனைக்கை மா உரிபோர்த்தான், பலர்பாடும் பழனத்தான்
நினைக்கின்ற நினைப்பெல்லாம் உரையாயோ நிகழ்வண்டே
சுனைக்குவளை மலர்க்கண்ணாள் சொல் தூதாய்ச் சோர்வாளோ
(4)
புதியையாய் இனியையாம் பூந்தென்றால், புறங்காடு
பதியாவதிது என்று பலர்பாடும் பழனத்தான்
மதியாதார் வேள்விதனை மதித்திட்ட மதிகங்கை
விதியாளன், என்னுயிர்மேல் விளையாடல் விடுத்தானோ
(5)
மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும்
விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானைப்
பண்பொருந்த இசைபாடும் பழனஞ்சேர் அப்பனைஎன்
கண்பொருந்தும் போதத்தும் கைவிடநான் கடவேனோ
(6)
பொங்கோத மால்கடலில் புறம்புறம்போய் இரைதேரும்
செங்கால்வெண் மடநாராய் செயற்படுவதறியேனான்
அங்கோல வளை கவர்ந்தான் அணிபொழில்சூழ் பழனத்தான்
தங்கோல நறுங்கொன்றைத் தார் அருளாதொழிவானோ
(7)
துணையார முயங்கிப்போய்த் துறைசேரும் மடநாராய்
பணையார வாரத்தான், பாட்டோவாப் பழனத்தான்
கணையார இருவிசும்பில் கடிஅரணம் பொடிசெய்த
இணையார மார்பன்என் எழில்நலம் உண்டிகழ்வானோ
(8)
கூவைவாய் மணிவரன்றிக் கொழித்தோடும் காவிரிப்பூம்
பாவைவாய் முத்திலங்கப் பாய்ந்தாடும் பழனத்தான்
கோவைவாய் மலைமகள்கோன் கொல்லேற்றின் கொடியாடைப்
பூவைகாள் மழலைகாள் போகாத பொழுதுளதே
(9)
புள்ளிமான் பொறியரவம் புள்ளுயர்த்தான் மணிநாகப்
பள்ளியான் தொழுதேத்த இருக்கின்ற பழனத்தான்
உள்ளுவார் வினைதீர்க்கும் என்றுரைப்பர் உலகெல்லாம்
கள்ளியேன் நான்இவர்க்கென் கனவளையும் கடவேனோ
(10)
வஞ்சித்தென் வளைகவர்ந்தான் வாரானே ஆயிடினும்
பஞ்சிக்கால் சிறகன்னம் பரந்தார்க்கும் பழனத்தான்
அஞ்சிப் போய்க் கலிமெலிய அழலோம்பும் அப்பூதி
குஞ்சிப் பூவாய் நின்ற சேவடியாய் கோடியையே

 

திருப்பழனம் – சம்பந்தர் தேவாரம்:

<– திருப்பழனம்

(1)
வேதமோதி வெண்ணூல்பூண்டு வெள்ளை எருதேறிப்
பூதம்சூழப் பொலிய வருவார், புலியின் உரிதோலார்
நாதா எனவும், நக்கா எனவும், நம்பா எனநின்று
பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழன நகராரே
(2)
கண்மேல் கண்ணும் சடைமேல் பிறையும் உடையார், காலனைப்
புண்ணார் உதிரம் எதிராறோடப் பொன்றப் புறந்தாளால்
எண்ணாதுதைத்த எந்தை பெருமான், இமவான் மகளோடும்
பண்ணார் களிவண்டறை பூஞ்சோலைப் பழன நகராரே
(3)
பிறையும் புனலும் சடைமேல் உடையார், பறைபோல் விழிகள் பேய்
உறையும் மயானம் இடமா உடையார், உலகர் தலைமகன்
அறையும் மலர்கொண்டடியார் பரவி ஆடல்பாடல் செய்
பறையும் சங்கும் பலியும் ஓவாப் பழன நகராரே
(4)
உரமன் உயர் கோட்டுலறு கூகை அலறு மயானத்தில்
இரவில்பூதம் பாடஆடி எழிலார் அலர்மேலைப்
பிரமன் தலையில் நறவமேற்ற பெம்மான், எமையாளும்
பரமன் பகவன் பரமேச்சுவரன் பழன நகராரே
(5)
குலவெஞ்சிலையால் மதில்மூன்றெரித்த கொல்லேறுடை அண்ணல்
கலவ மயிலும் குயிலும் பயிலும் கடல்போல் காவேரி
நலமஞ்சுடைய நறுமாங்கனிகள் குதி கொண்டெதிர் உந்திப்
பலவின் கனிகள் திரைமுன் சேர்க்கும் பழன நகராரே
(6)
வீளைக் குரலும், விளிச்சங்கொலியும், விழவின் ஒலிஓவா
மூளைத்தலை கொண்டடியார் ஏத்தப் பொடியா மதில்எய்தார்
ஈளைப் படுகிலையார் தெங்கில் குலையார் வாழையின்
பாளைக்கமுகின் பழம்வீழ் சோலைப் பழன நகராரே
(7)
பொய்யா மொழியார் முறையாலேத்திப் புகழ்வார் திருமேனி
செய்யார், கரிய மிடற்றார், வெண்ணூல் சேர்ந்த அகலத்தார்
கைஆடலினார், புனலால் மல்கு சடைமேல் பிறையோடும்
பையாடரவம் உடனே வைத்தார் பழன நகராரே
(8)
மஞ்சோங்குயரம் உடையான், மலையை மாறாய் எடுத்தான் தோள்
அஞ்சோடஞ்சும் ஆறுநான்கும் அடர ஊன்றினார்
நஞ்சார் சுடலைப் பொடி நீறணிந்த நம்பான் வம்பாரும்
பைந்தாமரைகள் கழனி சூழ்ந்த பழன நகராரே
(9)
கடியார் கொன்றைச் சுரும்பின் மாலை கமழ்புன் சடையார், விண்
முடியாப்படி மூவடியால் உலக முழுதும் தாவிய
நெடியான்; நீள் தாமரைமேல் அயனும் நேடிக் காணாத
படியார், பொடியாடகலமுடையார் பழன நகராரே
(10)
கண்டான் கழுவா முன்னேஓடிக் கலவைக் கஞ்சியை
உண்டாங்கவர்கள் உரைக்கும் சிறுசொல் ஓரார், பாராட்ட
வண்தாமரையின் மலர்மேல் நறவ மதுவாய் மிகஉண்டு
பண்தான்கெழும வண்டு யாழ்செய்யும் பழன நகராரே
(11)
வேய் முத்தோங்கி விரைமுன் பரக்கும் வேணுபுரம் தன்னுள்
நாவுய்த்தனைய திறலான் மிக்க ஞானசம்பந்தன்
பேசற்கினிய பாடல் பயிலும் பெருமான் பழனத்தை
வாயில் பொலிந்த மாலை பத்தும் வல்லார் நல்லாரே

 

திருப்பழனம்:

<-- சோழ நாடு (காவிரி வடகரை)

சம்பந்தர் தேவாரம்:
வேதமோதி வெண்ணூல்
அப்பர் தேவாரம்:
1. ஆடினார் ஒருவர்
2. சொல்மாலை பயில்கின்ற
3. அருவனாய் அத்தி
4. அலையார் கடல் நஞ்சம்
5. மேவித்து நின்று
6. ஒன்று கொலாம் (பொது)

 

திருவிசயமங்கை – அப்பர் தேவாரம்:

<– திருவிசயமங்கை

(1)
குசையும் அங்கையில் கோசமும் கொண்டஅவ்
வசையின் மங்கல வாசகர் வாழ்த்தவே
இசைய மங்கையும் தானும் ஒன்றாயினான்
விசைய மங்கையுள் வேதியன் காண்மினே
(2)
ஆதி நாதன், அடல்விடை மேலமர்
பூத நாதன், புலியதள் ஆடையன்
வேதநாதன், விசயமங்கை உளான்
பாதம் ஓதவல்லார்க்கில்லை பாவமே
(3)
கொள்ளிடக் கரைக் கோவந்தபுத்தூரில்
வெள்விடைக்கருள் செய் விசயமங்கை
உள்ளிடத்துறைகின்ற உருத்திரன்
கிள்ளிடத் தலைஅற்றது அயனுக்கே
(4)
திசையும் எங்கும் குலுங்கத் திரிபுரம்
அசைய, அங்கெய்திட்டாரழல் ஊட்டினான்
விசைய மங்கை விருத்தன் புறத்தடி
விசையின் மங்கி விழுந்தனன் காலனே
(5)
பொள்ளல் ஆக்கை அகத்தில் ஐம்பூதங்கள்
கள்ளமாக்கிக் கலக்கிய காரிருள்
விள்ளலாக்கி விசயமங்கைப் பிரான்
உள்ளல் நோக்கியென் உள்ளுள் உறையுமே
(6)
கொல்லை ஏற்றுக் கொடியொடு பொன்மலை
வில்லை ஏற்றுடையான், விசய மங்கைச்
செல்வ போற்றி என்பாருக்குத் தென்திசை
எல்லை எற்றலும் இன்சொலும் ஆகுமே
(7)
கண்பல்உக்க கபாலம் அங்கைக் கொண்டு
உண்பலிக்குழல் உத்தமன், உள்ளொளி
வெண்பிறைக் கண்ணியான், விசயமங்கை
நண்பனைத் தொழப் பெற்றது நன்மையே
(8)
பாண்டுவின் மகன் பார்த்தன் பணிசெய்து
வேண்டும் நல்வரம் கொள் விசயமங்கை
ஆண்டவன் அடியே நினைந்து ஆசையால்
காண்டலே கருத்தாகி இருப்பனே
(9)
வந்து கேண்மின் மயல்தீர் மனிதர்காள்
வெந்த நீற்றன் விசயமங்கைப் பிரான்
சிந்தையால் நினைவார்களைச் சிக்கெனப்
பந்துவாக்கி உய்யக் கொளும்  காண்மினே
(10)
இலங்கை வேந்தன் இருபது தோளிற
விலங்கல் சேர் விரலான் விசயமங்கை
வலஞ்செய்வார்களும் வாழ்த்திசைப்பார்களும்
நலஞ்செய்வார் அவர் நன்னெறி நாடியே

 

திருவிசயமங்கை – சம்பந்தர் தேவாரம்:

<– திருவிசயமங்கை

(1)
மருவமர் குழலுமை பங்கர், வார்சடை
அரவமர் கொள்கைஎம் அடிகள் கோயிலாம்
குரவமர் சுர புன்னை கோங்கு வேங்கைகள்
விரவிய பொழிலணி விசய மங்கையே
(2)
கீதமுன் இசைதரக் கிளரும் வீணையர்
பூதமுன் இயல்புடைப் புனிதர் பொன்னகர்
கோதனம் வழிபடக் குலவு நான்மறை
வேதியர் தொழுதெழு விசய மங்கையே
(3)
அக்கரவரையினர் அரிவை பாகமாத்
தொக்கநல் விடையுடைச் சோதி தொல்நகர்
தக்கநல் வானவர் தலைவர் நாள்தொறும்
மிக்கவர் தொழுதெழு விசய மங்கையே
(4)
தொடைமலி இதழியும் துன்னெருக்கொடு
புடைமலி சடைமுடி அடிகள் பொன்னகர்
படைமலி மழுவினர் பைங்கண் மூரிவெள்
விடைமலி கொடிஅணல் விசய மங்கையே
(5)
தோடமர் காதினன் துதைந்த நீற்றினன்
ஏடமர் கோதையோடினிதமர் இடம்
காடமர் மாகரி கதறப் போர்த்ததோர்
வேடமதுடைஅணல் விசய மங்கையே
(6)
மைப்புரை கண்உமை பங்கன், வண்டழல்
ஒப்புரை மேனி, எம்உடையவன் நகர்
அப்பொடு மலர் கொடங்கிறைஞ்சி வானவர்
மெய்ப்பட அருள்புரி விசய மங்கையே
(7)
இரும்பொனின் மலைவில்லின் எரிசரத்தினால்
வரும்புரங்களைப் பொடி செய்த மைந்தன்ஊர்
சுரும்பமர் கொன்றையும் தூய மத்தமும்
விரும்பிய சடைஅணல் விசய மங்கையே
(8)
உளங்கைய இருபதோடொருபதும் கொடாங்கு
அளந்தரும் வரையெடுத்திடும் அரக்கனைத்
தளர்ந்துடன் எரிதர அடர்த்த தன்மையன்
விளங்கிழையொடும் புகும் விசய மங்கையே
(9)
மண்ணினை உண்டவன், மலரின் மேலுறை
அண்ணல்கள் தமக்கு அளப்பரிய அத்தன்ஊர்
தண்ணறும் சாந்தமும் பூவு நீர்கொடு
விண்ணவர் தொழுதெழு விசய மங்கையே
(10)
கஞ்சியும் கவளமுண் கவணர் கட்டுரை
நஞ்சினும் கொடியன நமர்கள் தேர்கிலார்
செஞ்சடை முடியுடைத் தேவன் நன்னகர்
விஞ்சையர் தொழுதெழு விசய மங்கையே
(11)
விண்ணவர் தொழுதெழு விசய மங்கையை
நண்ணிய புகலியுள் ஞான சம்பந்தன்
பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர்
புண்ணியர் சிவகதி புகுதல் திண்ணமே

 

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page