திருமழபாடி – அப்பர் தேவாரம் (1):

<– திருமழபாடி 

(1)
நீறேறு திருமேனி உடையான் கண்டாய்
    நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைந்தான் கண்டாய்
கூறாக உமைபாகம் கொண்டான் கண்டாய்
    கொடியவிடம் உண்டிருண்ட கண்டன் கண்டாய்
ஏறேறி எங்கும் திரிவான் கண்டாய்
    ஏழுலகும் ஏழ்மலையும் ஆனான் கண்டாய்
மாறானார் தம்அரணம் அட்டான் கண்டாய்
    மழபாடி மன்னு மணாளன் தானே
(2)
கொக்கிறகு சென்னி உடையான் கண்டாய்
    கொல்லை விடையேறும் கூத்தன் கண்டாய்
அக்கரைமேல் ஆடல் உடையான் கண்டாய்
    அனலங்கை ஏந்திய ஆதி கண்டாய்
அக்கோடரவம் அணிந்தான் கண்டாய்
    அடியார்கட்காரமுதம் ஆனான் கண்டாய்
மற்றிருந்த கங்கைச் சடையான் கண்டாய்
    மழபாடி மன்னு மணாளன் தானே
(3)
நெற்றித் தனிக்கண் உடையான் கண்டாய்
    நேரிழையோர் பாகமாய் நின்றான் கண்டாய்
பற்றிப் பாம்பாட்டும் படிறன் கண்டாய்
    பல்லூர் பலிதேர் பரமன் கண்டாய்
செற்றார் புரமூன்றும் செற்றான் கண்டாய்
    செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய்
மற்றொரு குற்றம் இலாதான் கண்டாய்
    மழபாடி மன்னு மணாளன் தானே
(4)
அலையார்ந்த புனல்கங்கைச் சடையான் கண்டாய்
    அண்டத்துக்கப்பாலாய் நின்றான் கண்டாய்
கொலையான கூற்றம் குமைத்தான் கண்டாய்
    கொல்வேங்கைத் தோலொன்றுடுத்தான் கண்டாய்
சிலையால் திரிபுரங்கள் செற்றான் கண்டாய்
    செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய்
மலையார் மடந்தை மணாளன் கண்டாய்
    மழபாடி மன்னு மணாளன் தானே
(5)
உலந்தார்தம் அங்கம் அணிந்தான் கண்டாய்
    உவகையோடின்னருள்கள் செய்தான் கண்டாய்
நலந்திகழும் கொன்றைச் சடையான் கண்டாய்
    நால்வேதம் ஆறங்கம் ஆனான் கண்டாய்
உலந்தார் தலைகலனாக் கொண்டான் கண்டாய்
    உம்பரார் தங்கள் பெருமான் கண்டாய்
மலர்ந்தார் திருவடியென் தலைமேல் வைத்த
    மழபாடி மன்னு மணாளன் தானே
(6)
தாமரையான் தன்தலையைச் சாய்த்தான் கண்டாய்
    தகவுடையார் நெஞ்சிருக்கை கொண்டான் கண்டாய்
பூமலரான் ஏத்தும் புனிதன் கண்டாய்
    புணர்ச்சிப் பொருளாகி நின்றான் கண்டாய்
ஏமருவு வெஞ்சிலை ஒன்றேந்தி கண்டாய்
    இருளார்ந்த கண்டத்திறைவன் கண்டாய்
மாமருவும் கலை கையிலேந்தி கண்டாய்
    மழபாடி மன்னு மணாளன் தானே
(7)
நீராகி நெடுவரைகள் ஆனான் கண்டாய்
    நிழலாகி நீள்விசும்பும் ஆனான் கண்டாய்
பாராகிப் பௌவம் ஏழானான் கண்டாய்
    பகலாகி வானாகி நின்றான் கண்டாய்
ஆரேனும் தன்னடியார்க்கன்பன் கண்டாய்
    அணுவாகி ஆதியாய் நின்றான் கண்டாய்
வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்
    மழபாடி மன்னு மணாளன் தானே
(8)
பொன்னியலும் திருமேனி உடையான் கண்டாய்
    பூங்கொன்றைத் தாரொன்றணிந்தான் கண்டாய்
மின்னியலும் வார்சடையெம் பெருமான் கண்டாய்
    வேழத்தின் உரிவிரும்பிப் போர்த்தான் கண்டாய்
தன்னியல்பார் மற்றொருவர் இல்லான் கண்டாய்
    தாங்கரிய சிவம்தானாய் நின்றான் கண்டாய்
மன்னிய மங்கையோர் கூறன் கண்டாய்
    மழபாடி மன்னு மணாளன் தானே
(9)
ஆலாலம் உண்டுகந்த ஆதி கண்டாய்
    அடையலர்தம் புரமூன்றும் எய்தான் கண்டாய்
காலாலக் காலனையும் காய்ந்தான் கண்டாய்
    கண்ணப்பர்க்கருள் செய்த காளை கண்டாய்
பாலாரும் மொழிமடவாள் பாகன் கண்டாய்
    பசுவேறிப் பலிதிரியும் பண்பன் கண்டாய்
மாலாலும் அறிவரிய மைந்தன் கண்டாய்
    மழபாடி மன்னு மணாளன் தானே
(10)
ஒருசுடராய் உலகேழும் ஆனான் கண்டாய்
    ஓங்காரத்துட்பொருளாய் நின்றான் கண்டாய்
விரிசுடராய் விளங்கொளியாய் நின்றான் கண்டாய்
    விழவொலியும் வேள்வொலியும் ஆனான் கண்டாய்
இருசுடர் மீதோடா இலங்கைக் கோனை
    ஈடழிய இருபதுதோள் இறுத்தான் கண்டாய்
மருசுடரின் மாணிக்கக் குன்று கண்டாய்
    மழபாடி மன்னு மணாளன் தானே

 

திருமழபாடி – அப்பர் தேவாரம் (2):

<– திருமழபாடி

(1)
அலையடுத்த பெருங்கடல் நஞ்சமுதா உண்டு
    அமரர்கள்தம் தலைகாத்த ஐயர், செம்பொன்
சிலையெடுத்து மாநாகம் நெருப்புக் கோத்துத்
    திரிபுரங்கள் தீயிட்ட செல்வர் போலும்
நிலையடுத்த பசும்பொன்னால் முத்தால் நீண்ட
    நிரைவயிரப் பலகையால் குவைஆர்த்துற்ற
மலையடுத்த மழபாடி வயிரத் தூணே
    என்றென்றே நான்அரற்றி நைகின்றேனே
(2)
அறைகலந்த குழல்மொந்தை வீணை யாழும்
    அந்தரத்தில் கந்தருவர் அமரர் ஏத்த
மறைகலந்த மந்திரமும் நீரும் கொண்டு
    வழிபட்டார் வானாளக் கொடுத்தியன்றே
கறைகலந்த பொழில்கச்சிக் கம்பம் மேய
    கனவயிரத் திரள்தூணே, கலிசூழ் மாட
மறைகலந்த மழபாடி வயிரத் தூணே
    என்றென்றே நான்அரற்றி நைகின்றேனே
(3)
உரங்கொடுக்கும் இருள்மெய்யர் மூர்க்கர் பொல்லா
    ஊத்தைவாய்ச் சமணர்தமை உறவாக் கொண்ட
பரங் கெடுத்திங்கடியேனை ஆண்டு கொண்ட
    பவளத்தின் திரள்தூணே, பசும்பொன் முத்தே
புரங்கெடுத்துப் பொல்லாத காமன் ஆகம்
    பொடியாக விழித்தருளிப் புவியோர்க்கென்றும்
வரங்கொடுக்கும் மழபாடி வயிரத் தூணே
    என்றென்றே நான்அரற்றி நைகின்றேனே
(4)
ஊனிகந்தூண் உறிக்கையர் குண்டர் பொல்லா
    ஊத்தைவாய்ச் சமணர் உறவாகக் கொண்டு
ஞானகஞ் சேர்ந்துள்ள வயிரத்தை நண்ணா
    நாயேனைப் பொருளாக ஆண்டு கொண்ட
மீனகஞ்சேர் வெள்ளநீர் விதியால் சூடும்
    வேந்தனே, விண்ணவர்தம் பெருமான், மேக
வானகஞ்சேர் மழபாடி வயிரத் தூணே
    என்றென்றே நான்அரற்றி நைகின்றேனே
(5)
சிரமேற்ற நான்முகன்தன் தலையும் மற்றைத்
    திருமால்தன் செழுந்தலையும் பொன்றச் சிந்தி
உரமேற்ற இரவிபல் தகர்த்துச், சோமன்
    ஒளிர்கலைகள் படஉழக்கி உயிரை நல்கி
நரையேற்ற விடையேறி நாகம் பூண்ட
    நம்பியையே மறைநான்கும் ஒலமிட்டு
வரமேற்கும் மழபாடி வயிரத்தூணே
    என்றென்றே நான்அரற்றி நைகின்றேனே
(6)
சினந்திருத்தும் சிறுப்பெரியார் குண்டர் தங்கள்
    செதுமதியார் தீவினைக்கே விழுந்தேன் தேடிப்
புனந்திருத்தும் பொல்லாத பிண்டி பேணும்
    பொறியிலியேன் தனைப்பொருளா ஆண்டு கொண்டு
தனந்திருத்தும் அவர்திறத்தை ஒழியப் பாற்றித்
    தயாமூல தன்மவழி எனக்கு நல்கி
மனந்திருத்தும் மழபாடி வயிரத் தூணே
    என்றென்றே நான்அரற்றி நைகின்றேனே
(7)
சுழித்துணையாம் பிறவிவழித் துக்கம் நீக்கும்
    சுருள்சடைஎம் பெருமானே தூய தெண்ணீர்
இழிப்பரிய பசுபாசப் பிறப்பை நீக்கும்
    என்துணையே என்னுடைய பெம்மான் தம்மான்
பழிப்பரிய திருமாலும் அயனும் காணாப்
    பரிதியே சுருதி முடிக்கணியாய் வாய்த்த
வழித்துணையாம் மழபாடி வயிரத் தூணே
    என்றென்றே நான்அரற்றி நைகின்றேனே

 

திருமழபாடி:

<-- சோழ நாடு (காவிரி வடகரை)

சம்பந்தர் தேவாரம்:
1. களையும் வல்வினை
2. காலையார் வண்டினம்
3. அங்கை ஆரழலன்ன
அப்பர் தேவாரம்:
1. நீறேறு திருமேனி
2. அலையடுத்த பெருங்
சுந்தரர் தேவாரம்:
பொன்னார் மேனியனே

 

எதிர்கொள்பாடி:

<– சோழ நாடு – காவிரி வடகரை

(குறிப்பு: சுந்தரரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

 

சுந்தரர் தேவாரம்:

(1)
மத்த யானையேறி மன்னர் சூழ வருவீர்காள்
செத்த போதில் ஆருமில்லை சிந்தையுள் வைம்மின்கள்
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்மின் மனத்தீரே
அத்தர் கோயில் எதிர்கொள்பாடி என்பதடைவோமே
(2)
தோற்றமுண்டேல் மரணமுண்டு துயர மனைவாழ்க்கை
மாற்றமுண்டேல் வஞ்சமுண்டு நெஞ்ச மனத்தீரே
நீற்றர், ஏற்றர், நீலகண்டர், நிறைபுனல் நீள்சடைமேல்
ஏற்றர் கோயில் எதிர்கொள்பாடி என்பதடைவோமே
(3)
செடிகொள் ஆக்கை சென்றுசென்று தேய்ந்தொல்லை வீழாமுன்
வடிகொள் கண்ணார் வஞ்சனையுள்  பட்டு மயங்காதே
கொடிகொள் ஏற்றர், வெள்ளை நீற்றர், கோவண ஆடையுடை
அடிகள் கோயில் எதிர்கொள்பாடி என்பதடைவோமே
(4)
வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர் வஞ்ச மனத்தீரே
யாவராலும் இகழப் பட்டிங்கல்லலில் வீழாதே
மூவராயும் இருவராயும் முதல்வன் அவனேயாம்
தேவர் கோயில் எதிர்கொள்பாடி என்பதடைவோமே
(5)
அரித்து நம்மேல் ஐவர் வந்திங்காறலைப்பான் பொருட்டால்
சிரித்த பல்வாய் வெண்தலை போய் ஊர்ப்புறம் சேராமுன்
வரிக்கொடுத்திவ் வாளரக்கர் வஞ்சமதில் மூன்றும்
எரித்த வில்லி எதிர்கொள்பாடி என்பதடைவோமே
(6)
பொய்யர் கண்டீர் வாழ்க்கையாளர் பொத்தடைப்பான் பொருட்டால்
மையல் கொண்டீர் எம்மொடாடி நீரும் மனத்தீரே
நைய வேண்டா இம்மையேத்த அம்மை நமக்கருளும்
ஐயர் கோயில் எதிர்கொள்பாடி என்பதடைவோமே
(7)
கூசம் நீக்கிக், குற்றம் நீக்கிச், செற்ற மனம்நீக்கி
வாசமல்கு குழலினார்கள் வஞ்ச மனைவாழ்க்கை
ஆசை நீக்கி, அன்பு சேர்த்தி, என்பணிந்து ஏறேறும்
ஈசர் கோயில் எதிர்கொள்பாடி என்பதடைவோமே
(8)
இன்பமுண்டேல் துன்பமுண்டு ஏழை மனைவாழ்க்கை
முன்பு சொன்னால் மோழைமையாம் முட்டை மனத்தீரே
அன்பரல்லால் அணிகொள் கொன்றை அடிகள் அடிசேரார்
என்பர் கோயில் எதிர்கொள்பாடி என்பதடைவோமே
(9)
தந்தையாரும் தவ்வையாரும் எட்டனைச் சார்வாகார்
வந்து நம்மோடுள்அளாவி வான நெறிகாட்டும்
சிந்தையீரே நெஞ்சினீரே, திகழ்மதியஞ் சூடும்
எந்தை கோயில் எதிர்கொள்பாடி என்பதடைவோமே
(10)
குருதி சோர ஆனையின் தோல் கொண்ட குழற்சடையன்
மருதுகீறி ஊடுபோன மாலயனும் அறியாச்
சுருதியார்க்கும் சொல்லஒண்ணாச் சோதிஎம் ஆதியான்
கருது கோயில் எதிர்கொள்பாடி என்பதடைவோமே

 

அன்பில்ஆலந்துறை – அப்பர் தேவாரம்:

<– அன்பில்ஆலந்துறை

(1)
வானம் சேர் மதிசூடிய மைந்தனை
நீநெஞ்சே கெடுவாய் நினைகிற்கிலை
ஆனஞ்சாடியை அன்பிலாலந்துறைக்
கோன் எம்செல்வனைக் கூறிடகிற்றியே
(2)
காரணத்தர் கருத்தர் கபாலியார்
வாரணத்துரி போர்த்த மணாளனார்
ஆரணப் பொருள் அன்பிலாலந்துறை
நாரணற்கரியான் ஒரு நம்பியே
(3)
அன்பின் ஆனஞ்சு அமைந்துடனாடிய
என்பின் ஆனை உரித்துக் களைந்தவன்
அன்பிலானை அம்மானை அள்ளூறிய
அன்பினால் நினைந்தார் அறிந்தார்களே
(4)
சங்கை உள்ளதும் சாவது மெய், உமை
பங்கனார் அடி பாவியேன் நானுய்ய
அங்கணன் எந்தை அன்பிலாலந்துறைச்
செங்கணார் அடிச் சேரவும் வல்லனே
(5)
கொக்கிறகர், குளிர்மதிச் சென்னியர்
மிக்கரக்கர் புரமெரி செய்தவர்
அக்கரையினர், அன்பிலாலந்துறை
நக்குருவரும் நம்மை அறிவரே
(6)
வெள்ளமுள்ள விரிசடை நந்தியைக்
கள்ளமுள்ள மனத்தவர் காண்கிலார்
அள்ளலார் வயல் அன்பிலாலந்துறை
உள்ளவாறறியார் சிலர் ஊமரே
(7)
பிறவி மாயப் பிணக்கில் அழுந்தினும்
உறவெலாம் சிந்தித்துன்னி உகவாதே
அறவன் எம்பிரான் அன்பிலாலந்துறை
மறவாதே தொழுதேத்தி வணங்குமே
(8)
நுணங்கு நூலயன் மாலும் இருவரும்
பிணங்கி எங்கும் திரிந்தெய்த்தும் காண்கிலா
அணங்கன் எம்பிரான் அன்பிலாலந்துறை
வணங்கும் நும்வினை மாய்ந்தறும் வண்ணமே
(9)
பொய்யெலாம் உரைக்கும் சமண் சாக்கியக்
கையன்மார் உரை கேளாது எழுமினோ
ஐயன் எம்பிரான் அன்பிலாலந்துறை
மெய்யன் சேவடி ஏத்துவார் மெய்யரே
(10)
இலங்கை வேந்தன் இருபது தோளிற்று
மலங்க மாமலை மேல் விரல் வைத்தவன்
அலங்கல் எம்பிரான் அன்பிலாலந்துறை
வலங்கொள்வாரை வானோர் வலம் கொள்வரே

 

அன்பில்ஆலந்துறை – சம்பந்தர் தேவாரம்:

<– அன்பில்ஆலந்துறை

(1)
கணைநீடெரி மாலரவம் வரைவில்லா
இணையா எயில் மூன்றும் எரித்த இறைவர்
பிணைமா மயிலும் குயில்சேர் மடஅன்னம்
அணையும் பொழில் அன்பிலாலந்துறையாரே
(2)
சடையார், சதுரன், முதிரா மதிசூடி
விடையார் கொடி ஒன்றுடை எந்தை, விமலன்
கிடையார் ஒலியோத்தரவத்திசை கிள்ளை
அடையார் பொழில் அன்பிலாலந்துறையாரே
(3)
ஊரும் அரவம் சடைமேலுற வைத்துப்
பாரும் பலிகொண்டு ஒலிபாடும் பரமர்
நீருண் கயலும் வயல்வாளை வராலோடு
ஆரும் புனல் அன்பிலாலந்துறையாரே
(4)
பிறையும் அரவும் உறவைத்த முடிமேல்
நறை உண்டெழு வன்னியும் மன்னு சடையார்
மறையும் பல வேதியர் ஓத ஒலிசென்று
அறையும் புனல் அன்பிலாலந்துறையாரே
(5)
நீடும் புனல் கங்கையும் தங்க முடிமேல்
கூடும் மலையாள் ஒருபாகம் அமர்ந்தார்
மாடும் முழவம் அதிர மடமாதர்
ஆடும் பதி அன்பிலாலந்துறையாரே
(6)
நீறார் திருமேனியர், ஊனமிலார் பால்
ஊறார் சுவையாகிய உம்பர் பெருமான்
வேறார் அகிலும் மிகுசந்தனம் உந்தி
ஆறார் வயல் அன்பிலாலந்துறையாரே
(7)
செடியார் தலையில் பலிகொண்டு இனிதுண்ட
படியார் பரமன் பரமேட்டி தன்சீரைக்
கடியார் மலரும் புனல்தூவி நின்றேத்தும்
அடியார் தொழும் அன்பிலாலந்துறையாரே
(8)
விடத்தார் திகழும் மிடறன், நடமாடி
படத்தார் அரவம் விரவும் சடைஆதி
கொடித்தேர் இலங்கைக் குலக்கோன் வரையார
அடர்த்தார் அருள் அன்பிலாலந்துறையாரே
(9)
வணங்கிம் மலர்மேல் அயனும் நெடுமாலும்
பிணங்கி அறிகின்றிலர் மற்றும் பெருமை
சுணங்கும் முகத்தம் முலையாள் ஒருபாகம்
அணங்கும் நிகழ் அன்பிலாலந்துறையாரே
(10)
தறியார் துகில் போர்த்துழல்வார் சமண்கையர்
நெறியா உணரா நிலைக் கேடினர் நித்தல்
வெறியார் மலர் கொண்டடி வீழும் அவரை
அறிவார் அவர் அன்பிலாலந்துறையாரே
(11)
அரவார் புனல் அன்பிலாலந்துறை தன்மேல்
கரவாதவர் காழியுண் ஞானசம்பந்தன்
பரவார் தமிழ்பத்திசை பாடவல்லார் போய்
விரவாகுவர் வானிடை வீடெளிதாமே

 

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page