திருப்பல்லவனீச்சரம் – சம்பந்தர் தேவாரம் (1):

<– திருப்பல்லவனீச்சரம்

(1)
அடையார்தம் புரங்கள் மூன்றும் ஆரழலில் அழுந்த
விடையார் மேனியராய்ச் சீறும் வித்தகர் மேயஇடம்
கடையார்மாட நீடியெங்கும் கங்குல் புறந்தடவப்
படையார் புரிசைப் பட்டினஞ்சேர் பல்லவனீச்சரமே
(2)
எண்ணார் எயில்கள் மூன்றும்சீறும் எந்தைபிரான், இமையோர்
கண்ணாய் உலகம் காக்கநின்ற கண்ணுதல் நண்ணுமிடம்
மண்ணார் சோலைக் கோலவண்டு வைகலும் தேனருந்திப்
பண்ணார் செய்யும் பட்டினத்துப் பல்லவனீச்சரமே
(3)
மங்கைஅங்கோர் பாகமாக, வாள்நிலவார் சடைமேல்
கங்கைஅங்கே வாழவைத்த கள்வன் இருந்தஇடம்
பொங்கயஞ்சேர் புணரியோத மீதுயர் பொய்கையின்மேல்
பங்கயஞ்சேர் பட்டினத்துப் பல்லவனீச்சரமே
(4)
தாரார் கொன்றை பொன்தயங்கச் சாத்திய மார்பகலம்
நீரார்நீறு சாந்தம்வைத்த நின்மலன் மன்னும்இடம்
போரார் வேற்கண் மாதர் மைந்தர் புக்கிசை பாடலினால்
பாரார்கின்ற பட்டினத்துப் பல்லவனீச்சரமே
(5)
மைசேர் கண்டர், அண்டவாணர், வானவரும் துதிப்ப
மெய்சேர் பொடியர், அடியாரேத்த மேவியிருந்த இடம்
கைசேர் வளையார் விழைவினோடு காதன்மையால் கழலே
பைசேர் அரவார் அல்குலார்சேர் பல்லவனீச்சரமே
(6)
குழலினோசை வீணைமொந்தை கொட்ட, முழவதிரக்
கழலினோசை ஆர்க்கஆடும் கடவுள் இருந்தஇடம்
சுழியிலாரும் கடலில்ஓதம் தெண்திரை மொண்டெறியப்
பழியிலார்கள் பயில்புகாரில் பல்லவனீச்சரமே
(7)
வெந்தலாய வேந்தன்வேள்வி வேரறச் சாடி, விண்ணோர்
வந்தெலாமுன் பேணநின்ற மைந்தன் மகிழ்ந்தஇடம்
மந்தலாய மல்லிகையும் புன்னைவளர் குரவின்
பந்தலாரும் பட்டினத்துப் பல்லவனீச்சரமே
(8)
தேரரக்கன் மால்வரையைத் தெற்றியெடுக்க அவன்
தார்அரக்கும் திண்முடிகள் ஊன்றிய சங்கரன்ஊர்
கார்அரக்கும் கடல்கிளர்ந்த காலமெலாம் உணரப்
பாரர்அக்கம் பயில்புகாரில் பல்லவனீச்சரமே
(9)
அங்கமாறும் வேதநான்கும் ஓதும் அயன்நெடுமால்
தங்கணாலும் நேடநின்ற சங்கரன் தங்குமிடம்
வங்கமாரும் முத்தம்இப்பி வார் கடலூடலைப்பப்
பங்கமில்லார் பயில்புகாரில் பல்லவனீச்சரமே
(10)
உண்டுடுக்கை இன்றியே நின்று ஊர்நகவே திரிவார்
கண்டுடுக்கை மெய்யில் போர்த்தார் கண்டறியாதஇடம்
தண்டுடுக்கை தாளந்தக்கை சார நடம் பயில்வார்
பண்டிடுக்கண் தீரநல்கும் பல்லவனீச்சரமே
(11)
பத்தரேத்தும் பட்டினத்துப் பல்லவனீச்சரத்தெம்
அத்தன் தன்னை அணிகொள் காழி ஞானசம்பந்தன் சொல்
சித்தஞ்சேரச் செப்புமாந்தர் தீவினை நோயிலராய்
ஒத்தமைந்த உம்பர்வானில் உயர்வினொடோங்குவரே

 

திருப்பல்லவனீச்சரம் – சம்பந்தர் தேவாரம் (2):

<– திருப்பல்லவனீச்சரம்

(1)
பரசு பாணியர், பாடல் வீணையர், பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
அரசுபேணி நின்றார் இவர் தன்மை அறிவார்ஆர்
(2)
பட்ட நெற்றியர், நட்டமாடுவர், பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
இட்டமாய் இருப்பார் இவர் தன்மை அறிவார்ஆர்
(3)
பவள மேனியர், திகழு நீற்றினர், பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
அழகராய் இருப்பார் இவர்தன்மை அறிவார்ஆர்
(4)
பண்ணில் யாழினர், பயிலு மொந்தையர், பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
அண்ணலாய் இருப்பார் இவர்தன்மை அறிவார்ஆர்
(5)
பல்லில் ஓட்டினர், பலி கொண்டுண்பவர், பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
எல்லி ஆட்டுகந்தார் இவர்தன்மை அறிவார்ஆர்
(6)
பச்சை மேனியர், பிச்சை கொள்பவர், பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
இச்சையாய் இருப்பார் இவர்தன்மை அறிவார்ஆர்
(7)
பைங்கண் ஏற்றினர், திங்கள் சூடுவர், பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
எங்குமாய் இருப்பார் இவர்தன்மை அறிவார்ஆர்
(8)
பாதம்கைதொழ வேதம்ஓதுவர், பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
ஆதியாய் இருப்பார் இவர்தன்மை அறிவார்ஆர்
(9)
படிகொள் மேனியர், கடிகொள் கொன்றையர், பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
அடிகளாய் இருப்பார் இவர்தன்மை அறிவார்ஆர்
(10)
பறைகொள் பாணியர், பிறைகொள் சென்னியர், பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
இறைவராய் இருப்பார் இவர்தன்மை அறிவார்ஆர்
(11)
வானம் ஆள்வதற்கூனம்ஒன்றிலை, மாதர் பல்லவனீச்சரத்தானை
ஞானசம்பந்தன் நற்றமிழ் சொல்ல வல்லவர் நல்லவரே

 

திருக்கழிப்பாலை – அப்பர் தேவாரம் (4):

<– திருக்கழிப்பாலை

(1)
ஊனுடுத்தி ஒன்பது வாசல் வைத்து
    ஒள்ளெலும்பு தூணா உரோமம் மேய்ந்து
தாமெடுத்த கூரை தவிரப் போவார்
    தயக்கம் பலபடைத்தார், தாமரையினார்
கானெடுத்து மாமயில்கள் ஆலும் சோலைக்
    கழிப்பாலை மேய கபாலப்பனார்
வானிடத்தை ஊடறுத்து வல்லைச் செல்லும்
    வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே
(2)
முறையார்ந்த மும்மதிலும் பொடியாச் செற்று
    முன்னுமாய்ப் பின்னுமாய் முக்கண் எந்தை
பிறையார்ந்த சடைமுடி மேல் பாம்பு கங்கை
    பிணக்கம் தீர்த்துடன் வைத்தார், பெரிய நஞ்சுக்
கறையார்ந்த மிடற்றடங்கக் கண்ட எந்தை
    கழிப்பாலை மேய கபாலப்பனார்
மறையார்ந்த வாய்மொழியால் மாய யாக்கை
    வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே
(3)
நெளிவுண்டாக் கருதாதே நிமலன் தன்னை
    நினைமின்கள் நித்தலும், நேரிழையாளாய
ஒளிவண்டார் கருங்குழலி உமையாள் தன்னை
    ஒருபாகத்தமர்ந்து, அடியார் உள்கியேத்தக்
களிவண்டார் கரும்பொழில் சூழ் கண்டல் வேலிக்
    கழிப்பாலை மேய கபாலப்பனார்
வளியுண்டார் மாயக் குரம்பை நீங்க
    வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே
(4)
பொடிநாறு மேனியர், பூதிப் பையர்
    புலித்தோலர், பொங்கரவர், பூண நூலர்
அடிநூறு கமலத்தர், ஆரூர் ஆதி
    ஆனஞ்சும் ஆடும் ஆதிரையினார் தாம்
கடிநாறு பூஞ்சோலை கமழ்ந்து நாறும்
    கழிப்பாலை மேய கபாலப்பனார்
மடிநாறு மேனி இம்மாயம் நீங்க
    வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே
(5)
விண்ணானாய் விண்ணவர்கள் விரும்பி வந்து
    வேதத்தாய் கீதத்தாய் விரவியெங்கும்
எண்ணானாய் எழுத்தானாய் கடல்ஏழானாய்
    இறையானாய் எம்இறையே என்று நிற்கும்
கண்ணானாய் காரானாய் பாரும்ஆனாய்
    கழிப்பாலை உள்ளுறையும் கபாலப்பனார்
மண்ணாய மாயக் குரம்பை நீங்க
    வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே
(6)
விண்ணப்ப விச்சாதரர்கள் ஏத்த
    விரிகதிரான் எரிசுடரான் விண்ணுமாகிப்
பண்ணப்பன் பத்தர் மனத்துளேயும்
    பசுபதி பாசுபதன் தேச மூர்த்தி
கண்ணப்பன் கண்அப்பக் கண்டுகந்தார்
    கழிப்பாலை மேய கபாலப்பனார்
வண்ணப் பிணிமாய யாக்கை நீங்க
    வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே
(7)
பிணம்புல்கு பீறல் குரம்பை மெய்யாப்
    பேதப்படுகின்ற பேதைமீர்காள்
நிணம்புல்கு சூலத்தர், நீல கண்டர்
    எண்தோளர், எண்ணிறைந்த குணத்தினாலே
கணம்புல்லன் கருத்துகந்தார், காஞ்சியுள்ளார்
    கழிப்பாலை மேய கபாலப்பனார்
மணம்புல்கு மாயக் குரம்பை நீங்க
    வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே
(8)
இயல்பாய ஈசனை எந்தை தந்தை
    என்சிந்தை மேவி உறைகின்றானை
முயல்வானை மூர்த்தியைத் தீர்த்தமான
    தியம்பகன், திரிசூலத்தன், நகையன்
கயல்பாயும் கண்டல்சூழ் உண்ட வேலிக்
    கழிப்பாலை மேய கபாலப்பனார்
மயலாய மாயக் குரம்பை நீங்க
    வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே
(9)
செற்றதோர் மனமொழிந்து சிந்தை செய்து
    சிவமூர்த்தி என்றெழுவார் சிந்தை உள்ளால்
உற்றதோர் நோய்களைந்து இவ்வுலகமெல்லாம்
    காட்டுவான், உத்தமன் தான், ஓதாதெல்லாம்
கற்றதோர் நூலினன், களிறு செற்றான்
    கழிப்பாலை மேய கபாலப்பனார்
மற்றிதோர் மாயக் குரம்பை நீங்க
    வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே
(10)
பொருதலங்கல் நீள்முடியான் போரரக்கன்
    புட்பகந்தான் பொருப்பின் மீது ஓடாதாக
இருநிலங்கள் நடுக்கெய்த எடுத்திடுதலும்
    ஏந்திழையாள் தான்வெருவ இறைவன் நோக்கிக்
கரதலங்கள் கதிர்முடி ஆறஞ்சினோடு
    கால்விரலால் ஊன்று கழிப்பாலையார்
வருதல்அங்க மாயக் குரம்பை நீங்க
    வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே

 

அவளிவணல்லூர் – சம்பந்தர் தேவாரம்:

<– அவளிவணல்லூர்

(1)
கொம்பிரிய வண்டுலவு கொன்றை, புரிநூலொடு குலாவித்
தம் பரிசினோடு சுடுநீறு தட வந்து, இடபமேறிக்
கம்பரிய செம்பொன் நெடுமாடமதில் கல்வரைவிலாக
அம்பெரிய எய்தபெருமான் உறைவது அவளிவணலூரே
(2)
ஓமையன கள்ளியன வாகையன கூகை முரலோசை
ஈமமெரி சூழ்சுடலை வாச முதுகாடு நடமாடித்
தூய்மையுடை அக்கொடரவம் விரவி மிக்கொளி துலங்க
ஆமையொடு பூணும் அடிகள் உறைவது அவளிவணலூரே
(3)
நீறுடைய மார்பில் இமவான் மகளொர் பாகநிலை செய்து
கூறுடைய வேடமொடு கூடி அழகாயதொரு கோலம்
ஏறுடையரேனும் இடுகாடு இரவினின்று நடமாடும்
ஆறுடைய வார்சடையினான் உறைவது அவளிவணலூரே
(4)
பிணியுமிலர் கேடுமிலர் தோற்றமிலர் என்றுலகு பேணிப்
பணியும் அடியார்களன பாவமற இன்னருள் பயந்து
துணியுடைய தோலும், உடை கோவணமும், நாகமுடல் தொங்க
அணியும் அழகாக உடையான் உறைவது அவளிவணலூரே
(5)
குழலின்வரி வண்டுமுரல் மெல்லியன பொன்மலர்கள் கொண்டு
கழலின்மிசை இண்டை புனைவார் கடவுள் என்றமரர் கூடித்
தொழலும் வழிபாடும் உடையார் துயரும் நோயும் இலராவர்
அழலுமழு ஏந்து கையினான் உறைவது அவளிவணலூரே
(6)
துஞ்சலிலராய அமரர் நின்று தொழுதேத்த அருள் செய்து
நஞ்சுமிடறுண்டு கரிதாய வெளிதாகியொரு நம்பன்
மஞ்சுற நிமிர்ந்து உமைநடுங்க அகலத்தொடளாவி
அஞ்சமத வேழ உரியான் உறைவது அவளிவணலூரே
(7)
கூடரவ மொந்தைகுழல் யாழ் முழவினோடும் இசை செய்யப்
பீடரவம் ஆகுபடர் அம்புசெய்து பேரிடபமோடும்
காடரவமாகு கனல் கொண்டு இரவில் நின்று நடமாடி
ஆடரவம் ஆர்த்த பெருமான் உறைவது அவளிவணலூரே
(8)
ஒருவரையும் மேல்வலி கொடேன் எனஎழுந்த விறலோன்இப்
பெருவரையின் மேலொர் பெருமானும் உளனோ என வெகுண்ட
கருவரையும் ஆழ்கடலுமன்ன திறல்கைகள் உடையோனை
அருவரையில் ஊன்றி அடர்த்தான் உறைவது அவளிவணலூரே
(9)
பொறிவரிய நாகமுயர் பொங்கணை அணைந்த புகழோனும்
வெறிவரிய வண்டறைய விண்டமலர் மேல் விழுமியோனும்
செறிவரிய தோற்றமொடு ஆற்றல் மிகநின்று சிறிதேயும்
அறிவரியனாய பெருமான் உறைவது அவளிவணலூரே
(10)
கழியருகு பள்ளியிடமாக வடு மீன்கள் கவர்வாரும்
வழியருகு சாரவெயில் நின்றடிசில் உள்கி வருவாரும்
பழியருகினார் ஒழிக, பான்மையொடு நின்று தொழுதேத்தும்
அழியருவி தோய்ந்த பெருமான் உறைவது அவளிவணலூரே
(11)
ஆனமொழியான திறலோர் பரவும் அவளிவணலூர் மேல்
போனமொழி நன்மொழிகளாய புகழ் தோணிபுர ஊரன்
ஞானமொழி மாலைபல நாடுபுகழ் ஞானசம்பந்தன்
தேனமொழி மாலைபுகழ்வார் துயர்கள் தீயதிலர் தாமே

சீகாழி – சம்பந்தர் தேவாரம் (65)

<– சீகாழி

(1)
பந்தத்தால் வந்தெப்பால் பயின்றுநின்ற உம்பர், அப்
பாலே சேர்வாய் ஏனோர் கான்பயில்கண முனிவர்களும்
சிந்தித்தே வந்திப்பச் சிலம்பின் மங்கை தன்னொடும்
சேர்வார், நாணாள் நீள்கயிலைத் திகழ்தரு பரிசதெலாம்
சந்தித்தே இந்தப்பார் சனங்கள் நின்று தங்கணால்
தாமே காணா வாழ்வாரத் தகவு செய்தவனதிடம்
கந்தத்தால் எண்திக்கும் கமழ்ந்திலங்கு சந்தனக்
காடார்பூவார் சீர்மேவும் கழுமல வளநகரே
(2)
பிச்சைக்கே இச்சித்துப் பிசைந்தணிந்த வெண்பொடிப்
பீடார்நீடார் மாடாரும் பிறைநுதல் அரிவையொடும்
உச்சத்தான் நச்சிப்போல் தொடர்ந்தடர்ந்த வெங்கணேறு
ஊராவூரா நீள்வீதிப் பயில்வொடும் ஒலிசெய்இசை
வச்சத்தால்,  நச்சுச்சேர் வடங்கொள்கொங்கை மங்கைமார்
வாராநேரே மாலாகும் வசிவல அவனதிடம்
கச்சத்தால் மெச்சிப்பூக் கலந்திலங்கு வண்டினம்
காரார் காரார் நீள்சோலைக் கழுமல வளநகரே
(3)
திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்திலங்கு மத்தையின்
சேரேசேரே நீராகச் செறிதரு சுரநதியோடு
அங்கைச் சேர்வின்றிக்கே அடைந்துடைந்த வெண்தலைப்
பாலேமேலே மாலேயப் படர்வுறும் அவன்இறகும்
பொங்கப்பேர் நஞ்சைச்சேர் புயங்கமங்கள் கொன்றையின்
போதார்தாரே தாமேவிப் புரிதரு சடையன்இடம்
கங்கைக்கேயும் பொற்பார் கலந்துவந்த பொன்னியின்
காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே
(4)
அண்டத்தால் எண்திக்கும் அமைந்தடங்கு மண்டலத்து
ஆறேவேறே வானாள்வார் அவரவர் இடமதெலாம்
மண்டிப்போய் வென்றிப்போர் மலைந்தலைந்த உம்பரும்
மாறேலாதார் தாமேவும் வலிமிகு புரமெரிய
முண்டத்தே வெந்திட்டே முடிந்திடிந்த இஞ்சிசூழ்
மூவாமூதூர் மூதூரா முனிவு செய்தவனதிடம்
கண்டிட்டே செஞ்சொற்சேர் கவின்சிறந்த மந்திரக்
காலேஓவாதார் மேவும் கழுமல வளநகரே

(5)
திக்கிற்றே அற்றற்றே திகழ்ந்திலங்கு மண்டலச்
சீறார்வீறார் போரார் தாரகன்உடல் அவனெதிரே
புக்கிட்டே வெட்டிட்டே புகைந்தெழுந்த சண்டத்தீப்
போலேபூநீர் தீகால்மீப் புணர்தரும் உயிர்கள்திறம்
சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்த மங்கை !செங்கதத்
தோடேயாமே மாலோகத் துயர் களைபவனதிடம்
கைக்கப்பேர் யுக்கத்தே கனன்றுமிண்டு தண்டலைக்
காடேயோடா ஊரேசேர் கழுமல வளநகரே

(6)
செற்றிட்டே வெற்றிச்சேர் திகழ்ந்ததும்பி மொய்ம்புறும்
சேரேவாரா நீள்கோதைத் தெரியிழை பிடியதுவாய்
ஒற்றைச்சேர் முற்றல் கொம்புடைத் தடக்கை முக்கண்மிக்கு
ஓவாதேபாய் மாதானத்துறு புகர்முக இறையைப்
பெற்றிட்டே மற்றிப்பார் பெருத்துமிக்க துக்கமும்
பேராநோய் தாம் ஏயாமைப் பிரிவுசெய்தவனதிடம்
கற்றிட்டே எட்டெட்டுக் கலைத்துறைக் கரைச்செலக்
காணாதாரே சேராமெய்க் கழுமல வளநகரே

(7)
பத்திப்பேர் வித்திட்டே பரந்த ஐம்புலன்கள்வாய்ப்
பாலேபோகாமே, காவாப் பகையறும் வகைநினையா
முத்திக்கே விக்கத்தே முடிக்கு முக்குணங்கள் வாய்
மூடாவூடா நாலந்தக் கரணமும் ஒருநெறியாய்ச்
சித்திக்கே உய்த்திட்டுத் திகழ்ந்தமெய்ப் பரம்பொருள்
சேர்வார்தாமே தானாகச் செயுமவன் உறையுமிடம்
கத்திட்டோர் சட்டங்கம் கலந்திலங்கு நற்பொருள்
காலேஓவாதார் மேவும் கழுமல வளநகரே

(8)
செம்பைச்சேர் இஞ்சிச்சூழ் செறிந்திலங்கு பைம்பொழில்
சேரேவாரா வாரீசத் திரையெறி நகர்இறைவன்
இம்பர்க்கேதம் செய்திட்டிருந்து, அரன் பயின்றவெற்பு
ஏரார் பூநேரோர் பாதத்தெழில் விரல் அவண்நிறுவிட்டு
அம்பொற்பூண் வென்றித்தோள் அழிந்துவந்தனம் செய்தாற்கு
ஆரார் கூர்வாள் வாணாள் அன்றருள் புரிபவனதிடம்
கம்பத்தார் தும்பித்திண் கவுள்சொரிந்த மும்மதக்
காரார்சேறார் மாவீதிக் கழுமல வளநகரே

(9)
பன்றிக்கோலம் கொண்டிப் படித்தடம் பயின்று !இடப்
பானாம் மால், தானா மேயப் பறவையின் உருவுகொள
ஒன்றிட்டே அம்புச்சேர் உயர்ந்த பங்கயத்தவன்
ஓதான்ஓதான் அஃதுணராதுருவினது அடிமுடியும்
சென்றிட்டே வந்திப்பத், திருக்களங்கொள் பைங்கணின்று
ஏசால்வேறோர் ஆகாரம் தெரிவு செய்தவனதிடம்
கன்றுக்கே முன்றிற்கே கலந்திலம் நிறைக்கவும்
காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே

(10)
தட்டிட்டே முட்டிக்கைத் தடுக்கிடுக்கி நின்றுணாத்
தாமேபேணாதே நாளும் சமணொடு உழல்பவரும்
இட்டத்தால் அத்தம்தான் இதன்றதென்று நின்றவர்க்கு
ஏயாமே வாயேதுச் சொல் இலைமலி மருதம்பூப்
புட்டத்தே அட்டிட்டுப் புதைக்கும் மெய்க்கொள் புத்தரும்
போல்வார்தாம் ஓராமே போய்ப் புணர்வு செய்தவனதிடம்
கட்டிக்கால் வெட்டித் தீங்கரும்பு தந்த பைம்புனல்
காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே

(11)
கஞ்சத்தேன் உண்டிட்டே களித்துவண்டு சண்பகக்
கானேதேனே போராரும் கழுமல நகர்இறையைத்
தஞ்சைச்சார் சண்பைக்கோன் சமைத்த நற்கலைத்துறை
தாமேபோல்வார் தேனேரார் தமிழ்விரகன் மொழிகள்
எஞ்சத் தேய்வின்றிக்கே இமைத்திசைத்தமைத்த கொண்டு
ஏழேஏழே நாலேமூன்று இயலிசை இசைஇயல்பா
வஞ்சத்தேய்வின்றிக்கே மனங்கொளப் பயிற்றுவோர்
மார்பே சேர்வாள் வானோர்சீர் மதிநுதல் மடவரலே

தில்லை – சம்பந்தர் தேவாரம் (1):

(1)
கற்றாங்கு எரியோம்பிக் கலியை வாராமே
செற்றார் வாழ் தில்லைச் சிற்றம்பல மேய
முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே
(2)
பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட்டெரிஓம்பும்
சிறப்பர் வாழ் தில்லைச் சிற்றம்பல மேய
பிறப்பில் பெருமானைப் பின்தாழ் சடையானை
மறப்பிலார் கண்டீர் மையல் தீர்வாரே
(3)
மையார் ஒண்கண்ணார் மாட நெடுவீதிக்
கையால் பந்தோச்சும் கழிசூழ் தில்லையுள்
பொய்யா மறைபாடல் புரிந்தான் உலகேத்தச்
செய்யான் உறைகோயில் சிற்றம்பலம் தானே
(4)
நிறைவெண் கொடிமாட நெற்றி நேர்தீண்டப்
பிறைவந்திறை தாக்கும் பேரம்பலம் தில்லைச்
சிறை வண்டறைஓவாச் சிற்றம்பல மேய
இறைவன் கழலேத்தும் இன்பம் இன்பமே
(5)
செல்வ நெடுமாடம் சென்று சேணோங்கிச்
செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம்பல மேய
செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே
(6)
வரு மாந்தளிர்மேனி மாதோர் பாகமாம்
திருமாம் தில்லையுள் சிற்றம்பல மேய
கருமான் உரியாடைக் கறைசேர் கண்டத்தெம்
பெருமான் கழலல்லால் பேணாதுள்ளமே
(7)
அலையார் புனல்சூடி, ஆகத்தொருபாகம்
மலையான் மகளோடு மகிழ்ந்தான் உலகேத்தச்
சிலையால் எயிலெய்தான் சிற்றம்பலம் தன்னைத்
தலையால் வணங்குவார் தலையானார்களே
(8)
கூர் வாளரக்கன் தன் வலியைக் குறைவித்துச்
சீராலே மல்கு சிற்றமபல மேய
நீரார் சடையானை நித்தல் ஏத்துவார்
தீரா நோயெல்லாம் தீர்தல் திண்ணமே
(9)
கோணாகணையானும், குளிர் தாமரையானும்
காணார் கழலேத்தக் கனலாய் ஓங்கினான்
சேணார் வாழ்தில்லைச் சிற்றம்பலம் ஏத்த
மாணா நோயெல்லாம் வாளா மாயுமே
(10)
பட்டைத் துவராடைப் படிமம் கொண்டாடும்
முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே
சிட்டர்வாழ் தில்லைச் சிற்றம்பல மேய
நட்டப் பெருமானை நாளும் தொழுவோமே
(11)
ஞாலத்துயர் காழி ஞான சம்பந்தன்
சீலத்தார் கொள்கைச் சிற்றம்பல மேய
சூலப் படையானைச் சொன்ன தமிழ்மாலை
கோலத்தால் பாட வல்லார் நல்லாரே

 

தில்லை – சம்பந்தர் தேவாரம் (2):

(1)
ஆடினாய் நறு நெய்யொடு பால்தயிர், அந்தணர் பிரியாத சிற்றம்பலம்
நாடினாய் இடமா, நறுங்கொன்றை நயந்தவனே
பாடினாய் மறையோடு பல் கீதமும், பல்சடைப்பனி கால்கதிர் வெண்திங்கள்
சூடினாய், அருளாய் சுருங்கஎம் தொல்வினையே
(2)
கொட்டமே கமழும் குழலாளொடு கூடினாய், எருதேறினாய், நுதல்
பட்டமே புனைவாய், இசை பாடுவ பாரிடமா
நட்டமே நவில்வாய், மறையோர் தில்லை நல்லவர் பிரியாத சிற்றம்பலம்
இட்டமா உறைவாய், இவை மேவியதென்னை கொலோ
(3)
நீலத்தார் கரிய மிடற்றார், நல்ல நெற்றி மேலுற்ற கண்ணினார், பற்று
சூலத்தார், சுடலைப்பொடி நீறணிவார், சடையார்
சீலத்தார் தொழுதேத்து சிற்றம்பலம் சேர்தலால் கழற்சேவடி கைதொழக்
கோலத்தாய் அருளாய் உன் காரணம் கூறுதுமே
(4)
கொம்பலைத்தழகெய்திய நுண்ணிடைக் கோல வாள்மதி போல முகத்திரண்டு
அம்பலைத்த கண்ணாள் முலைமேவிய வார்சடையான்
கம்பலைத்தெழு காமுறு காளையர் காதலால் கழற்சேவடி கைதொழ
அம்பலத்துறைவான் அடியார்க்கடையா வினையே
(5)
தொல்லையார் அமுதுண்ண நஞ்சுண்டதோர் தூமணி மிடறா, பகுவாயதோர்
பல்லையார் தலையில் பலி ஏற்றுழல் பண்டரங்கா
தில்லையார் தொழுதேத்து சிற்றம்பலம் சேர்தலால் கழற்சேவடி கைதொழ
இல்லையாம் வினை தான், எரியம்மதில் எய்தவனே
(6)
ஆகந்தோய் அணி கொன்றையாய், அனல் அங்கையாய், அமரர்க்கமரா, உமை
பாகந்தோய் பகவா, பலியேற்றுழல் பண்டரங்கா
மாகந்தோய் பொழில்மல்கு சிற்றம்பலம் மன்னினாய், மழுவாளினாய், அழல்
நாகந்தோய் அரையாய், அடியாரை நண்ணா வினையே
(7)
சாதியார் பளிங்கின்னொடு வெள்ளிய சங்க வார்குழையாய், திகழப்படும்
வேதியா, விகிர்தா, விழவாரணி தில்லை தன்னுள்
ஆதியாய்க்கிடமாய சிற்றம்பலம் அங்கையால் தொழவல்ல அடியார்களை
வாதியாதகலும், நலியா மலி தீவினையே
(8)
வேயினார் பணைத் தோளியொடு ஆடலை வேண்டினாய், விகிர்தா, உயிர்கட்கமுது
ஆயினாய், இடுகாட்டெரியாடல் அமர்ந்தவனே
தீயினார் கணையால் புரம் மூன்றெய்த செம்மையாய், திகழ்கின்ற சிற்றம்பலம்
மேயினாய், கழலே தொழுதெய்துதும் மேலுலகே
(9)
தாரினார் விரி கொன்றையாய், மதிதாங்கு நீள் சடையாய், தலைவா, நல்ல
தேரினார் மறுகின் திருவாரணி தில்லை தன்னுள்
சீரினால் வழிபாடு ஒழியாததோர் செம்மையால் அழகாய சிற்றம்பலம்
ஏரினால் அமர்ந்தாய், உன சீரடி ஏத்துதுமே
(10)
வெற்றரை உழல்வார், துவர் ஆடைய வேடத்தார் அவர்கள் உரை கொள்ளல்மின்
மற்றவர் உலகின் அவலமவை மாற்றகில்லார்
கற்றவர் தொழுதேத்து சிற்றம்பலம் காதலால் கழற்சேவடி கைதொழ
உற்றவர் உலகில் உறுதிகொள வல்லவரே
(11)
நாறு பூம்பொழில் நண்ணிய காழியுள் நான்மறை வல்ல ஞானசம்பந்தன்
ஊறும் இன்தமிழால் உயர்ந்தார் உறை தில்லை தன்னுள்
ஏறு தொல்புகழ் ஏந்து சிற்றம்பலத்தீசனை இசையால் சொன்ன பத்திவை
கூறுமாறு வல்லார் உயர்ந்தாரொடும் கூடுவரே

 

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page