திருப்பாலைத்துறை:

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: அப்பர் சுவாமிகளால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(அப்பர் தேவாரம்):

(1)
நீல மாமணி கண்டத்தர், நீள்சடைக்
கோல மாமதி கங்கையும் கூட்டினார்
சூல மான்மழு ஏந்திச் சுடர்முடிப்
பால் நெய்யாடுவர் பாலைத்துறையரே
(2)
கவளமா களிற்றின் உரி போர்த்தவர்
தவள வெண்ணகை மங்கையொர் பங்கினர்
திவள வானவர் போற்றித் திசைதொழும்
பவள மேனியர் பாலைத்துறையரே
(3)
மின்னின் நுண்ணிடைக் கன்னியர் மிக்கெங்கும்
பொன்னி நீர்மூழ்கிப் போற்றி அடிதொழ
மன்னி நான்மறையோடு பல்கீதமும்
பன்னினார்அவர் பாலைத்துறையரே
(4)
நீடு காடிடமாய் நின்ற பேய்க்கணம்
கூடு பூதங் குழுமி நின்றார்க்கவே
ஆடினார் அழகாகிய நான்மறை
பாடினார்அவர் பாலைத்துறையரே
(5)
சித்தர் கன்னியர் தேவர்கள் தானவர்
பித்தர் நான்மறை வேதியர் பேணிய
அத்தனே நமை ஆளுடையாய் எனும்
பத்தர்கட்கன்பர் பாலைத்துறையரே
(6)
விண்ணினார் பணிந்தேத்த வியப்புறும்
மண்ணினார் மறவாது சிவாயஎன்று
எண்ணினார்க்கிடமா எழில் வானகம்
பண்ணினார் அவர் பாலைத்துறையரே
(7)
குரவனார் கொடு கொட்டியுங் கொக்கரை
விரவினார் பண் கெழுமிய வீணையும்
மருவு நாண்மலர் மல்லிகை செண்பகம்
பரவுநீர்ப் பொன்னிப் பாலைத்துறையரே
(8)
தொடருந் தொண்டரைத் துக்கம் தொடர்ந்துவந்து
அடரும் போதரனாய் அருள் செய்பவர்
கடலின் நஞ்சணி கண்டர், கடிபுனல்
படருஞ் செஞ்சடைப் பாலைத்துறையரே
(9)
மேகந் தோய்பிறை சூடுவர், மேகலை
நாகந் தோய்ந்த அரையினர், நல்லியல்
போகந் தோய்ந்த புணர்முலை மங்கையோர்
பாகந் தோய்ந்தவர் பாலைத்துறையரே
(10)
வெங்கண் வாளரவாட்டி வெருட்டுவர்
அங்கணார் அடியார்க்கருள் நல்குவர்
செங்கண் மாலயன் தேடற்கரியவர்
பைங்கண் ஏற்றினர் பாலைத்துறையரே
(11)
உரத்தினால் அரக்கன் உயர் மாமலை
நெருக்கினானை, நெரித்தவன் பாடலும்
இரக்கமா அருள் செய்த பாலைத்துறை
கரத்தினால் தொழுவார் வினை ஓயுமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page