027 புருடோத்தம நம்பி – கோயில் – ‘வானவர்கள் வேண்ட’

<– 9ஆம் திருமுறை

(1)
வானவர்கள் வேண்ட வளர்நஞ்சை உண்டார்தாம்
ஊனமிலா என்கை ஒளிவளைகள் கொள்வாரோ
தேனல்வரி வண்டறையுந் தில்லைச் சிற்றம்பலவர்
நானமரோ என்னாதே நாடகமே ஆடுவரே

(2)
ஆடிவரும் காரரவும் ஐம்மதியும் பைங்கொன்றை
சூடிவருமா கண்டேன் தோள்வளைகள் தோற்றாலும்
தேடிஇமையோர் பரவுந் தில்லைச் சிற்றம்பலவர்
ஆடிவரும் போதருகே நிற்கவுமே ஒட்டாரே

(3)
ஒட்டா வகைஅவுணர் முப்புரங்கள் ஒர்அம்பால்
பட்டாங்கழல் விழுங்க எய்துகந்த பண்பினார்
சிட்டார் மறைஒவாத் தில்லைச் சிற்றம்பலவர்
கொட்டா நடமாடக் கோல்வளைகள் கொள்வாரே

(4)
ஆரே இவைபடுவார் ஐயம் கொளவந்து
போரேடி என்று புருவம் இடுகின்றார்
தேரார் விழவோவாத் தில்லைச் சிற்றம்பலவர்
தீராநோய் செய்வாரை ஒக்கின்றார் காணீரே

(5)
காணீரே என்னுடைய கைவளைகள் கொண்டார்தாம்
சேணார் மணிமாடத் தில்லைச் சிற்றம்பலவர்
பூணார் வனமுலைமேற் பூஅம்பாற் காமவேள்
ஆணாடுகின்றவா கண்டும் அருளாரே

(6)
ஏயிவரே வானவர்க்கும் வானவரே என்பாரால்
தாயிவரே எல்லார்க்குந் தந்தையுமாம் என்பாரால்
தேய்மதியஞ் சூடிய தில்லைச் சிற்றம்பலவர்
வாயின கேட்டறிவார் வையகத்தார் ஆவாரே

(7)
ஆவா இவர்தம் திருவடி கொண்டந்தகன் தன்
மூவா உடல்அவியக் கொன்றுகந்த முக்கண்ணர்
தேவாம் மறைபயிலுந் தில்லைச் சிற்றம்பலவர்
கோவாய் இனவளைகள் கொள்வாரோ என்னையே

(8)
என்னை வலிவார்ஆர் என்ற இலங்கையர்கோன்
மன்னு முடிகள் நெரித்த மணவாளர்
செந்நெல் விளைகழனித் தில்லைச் சிற்றம்பலவர்
முன்னந்தான் கண்டறிவார் ஒவ்வார்இம் முத்தரே

(9)
முத்தர் முதுபகலே வந்தென்றன் இல்புகுந்து
பத்தர் பலியிடுக என்றெங்கும் பார்க்கின்றார்
சித்தர் கணம்பயிலுந் தில்லைச் சிற்றம்பலவர்
கைத்தலங்கள் வீசி நின்றாடுங்கால் நோக்காரே

(10)
நோக்காத தன்மையால் நோக்கிலோம் யாம்என்று
மாற்காழி ஈந்து, மலரோனை நிந்தித்துச்
சேக்காதலித்தேறுந் தில்லைச்சிற்றம்பலவர்
ஊர்க்கே வந்தென் வளைகள் கொள்வாரோ ஒண்ணுதலீர்

(11)
ஒண்ணுதலி காரணமா உம்பர் தொழுதேத்தும்
கண்ணுதலான் தன்னைப் புருடோத்தமன் சொன்ன
பண்ணுதலைப் பத்தும் பயின்றாடிப் பாடினார்
எண்ணுதலைப் பட்டங்கினிதா இருப்பாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page