திருக்கோகரணம் – அப்பர் தேவாரம்:

<– திருக்கோகரணம்

(1)
சந்திரனும் தண்புனலும் சந்தித்தான் காண்
    தாழ்சடையான் காண், சார்ந்தார்க்கமுதானான் காண்
அந்தரத்தில் அசுரர் புரம்மூன்று அட்டான் காண்
    அவ்வுருவில் அவ்வுருவம் ஆயினான் காண்
பந்தரத்து நான்மறைகள் பாடினான் காண்
    பலபலவும் பாணி பயில்கின்றான் காண்
மந்திரத்து மறைப்பொருளும் ஆயினான் காண்
    மாகடல்சூழ் கோகரணம் மன்னினானே
(2)
தந்தஅத்தன் தன்தலையைத் தாங்கினான் காண்
    சாரணன் காண், சார்ந்தார்க்கின்னமுதானான் காண்
கெந்தத்தன் காண், கெடில வீரட்டன் காண்
    கேடிலி காண், கெடுப்பார் மற்றில்லாதான் காண்
வெந்தொத்த நீறுமெய் பூசினான் காண்
    வீரன் காண், வியன் கயிலை மேவினான் காண்
வந்தொத்த நெடுமாற்கும் அறிவொணான் காண்
    மாகடல்சூழ் கோகரணம் மன்னினானே
(3)
தன்னுருவம் யாவருக்கும் தாக்காதான் காண்
    தாழ்சடைஎம் பெருமான் காண், தக்கார்க்குள்ள
பொன்னுருவச் சோதி புனலாடினான் காண்
    புராணன் காண், பூதங்கள் ஆயினான் காண்
மின்னுருவ நுண்ணிடையாள் பாகத்தான் காண்
    வேழத்தின் உரிவெருவப் போர்த்தான் தான் காண்
மன்னுருவாய் மாமறைகள் ஓதினான் காண்
    மாகடல்சூழ் கோகரணம் மன்னினானே
(4)
ஆறேறு செஞ்சடையெம் ஆரூரன் காண்
    அன்பன் காண், அணிபழனம் மேயான் தான் காண்
நீறேறி நிழல் திகழும் மேனியான் காண்
    நிருபன் காண், நிகரொன்றும் இல்லாதான் காண்
கூறேறு கொடுமழு வாள்படையினான் காண்
    கொக்கரையன் காண், குழுநல் பூதத்தான் காண்
மாறாய மதில்மூன்றும் மாய்வித்தான் காண்
    மாகடல்சூழ் கோகரணம் மன்னினானே
(5)
சென்று அச்சிலை வாங்கிச் சேர்வித்தான் காண்
    தீயம்பன் காண், திரிபுரங்கள் மூன்றும்
பொன்றப் பொடியாக நோக்கினான் காண்
    பூதன் காண், பூதப்படையாளி காண்
அன்றப்பொழுதே அருள் செய்தான் காண்
    அனலாடி காண், அடியார்க்கமுதானான் காண்
மன்றல் மணம் கமழும் வார்சடையான் காண்
    மாகடல்சூழ் கோகரணம் மன்னினானே
(6)
பிறையோடு பெண்ணொருபால் வைத்தான் தான் காண்
    பேரவன் காண், பிறப்பொன்றும் இல்லாதான் காண்
கறையோடு மணிமிடற்றுக் காபாலி காண்
    கட்டங்கன் காண், கையில் கபாலமேந்திப்
பறையோடு பல்கீதம் பாடினான் காண்
    ஆடினான் காண், பாணியாக நின்று
மறையோடு மாகீதம் கேட்டான் தான் காண்
    மாகடல்சூழ் கோகரணம் மன்னினானே
(7)
மின்னளந்த மேல்முகட்டின் மேலுற்றான் காண்
    விண்ணவர்தம் பெருமான் காண், மேவிலெங்கும்
முன்அளந்த மூவர்க்கும் முதலானான் காண்
    மூவிலைவேல் சூலத்தெம் கோலத்தான் காண்
எண்அளந்தென் சிந்தையே மேவினான் காண்
    ஏவலன் காண், இமையோர்கள் ஏத்த நின்று
மண்ணளந்த மாலறியா மாயத்தான் காண்
    மாகடல்சூழ் கோகரணம் மன்னினானே
(8)
பின்னு சடைமேல் பிறை சூடினான் காண்
    பேரருளன் காண், பிறப்பொன்றில்லாதான் காண்
முன்னி உலகுக்கு முன்னானான் காண்
    மூவெயிலும் செற்றுகந்த முதல்வன் தான் காண்
இன்னவுரு என்று அறிவொண்ணாதான் தான் காண்
    ஏழ்கடலும் ஏழுலகும் ஆயினான் காண்
மன்னும் மடந்தையோர் பாகத்தான் காண்
    மாகடல்சூழ் கோகரணம் மன்னினானே
(9)
வெட்ட வெடித்தார்க்கோர் வெவ்வழலன் காண்
    வீரன் காண், வீரட்டம் மேவினான் காண்
பொட்ட அநங்கனையும் நோக்கினான் காண்
    பூதன் காண், பூதப் படையினான் காண்
கட்டக் கடுவினைகள் காத்தாள்வான் காண்
    கண்டன் காண், வண்டுண்ட கொன்றையான் காண்
வட்ட மதிப்பாகம் சூடினான் காண்
    மாகடல்சூழ் கோகரணம் மன்னினானே
(10)
கையால் கயிலை எடுத்தான் தன்னைக்
    கால்விரலால் தோள்நெரிய ஊன்றினான் காண்
மெய்யின் நரம்பிசையால் கேட்பித்தாற்கு
    மீண்டே அவற்கருள்கள் நல்கினான் காண்
பொய்யர் மனத்துப் புறம்பாவான் காண்
    போர்ப்படையான் காண், பொருவார் இல்லாதான் காண்
மைகொள் மணிமிடற்று வார்சடையான் காண்
    மாகடல்சூழ் கோகரணம் மன்னினானே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page