(1)
தோற்றினான் எயிறு கவ்வித் தொழிலுடை அரக்கன் தன்னைத்
தேற்றுவான் சென்று சொல்லச் சிக்கெனத் தவிருமென்று
வீற்றினை உடையனாகி வெடுவெடுத்தெழுந்தவன் தன்
ஆற்றலை அழிக்க வல்லார் அவளிவணல்லூராரே
(2)
வெம்பினார் அரக்கர் எல்லாம் மிகச் சழக்காயிற்றென்று
செம்பினால் எடுத்த கோயில் சிக்கெனச் சிதையுமென்ன
நம்பினார் என்று சொல்லி நன்மையான் மிக்கு நோக்கி
அம்பினார் அழிய எய்தார் அவளிவணல்லூராரே
(3)
கீழ்ப்படக் கருதலாமோ கீர்த்திமை உள்ளதாகில்
தோள்பெரு வலியினாலே தொலைப்பனான் மலையை என்று
வேள்பட வைத்தவாறே விதிர் விதிர்த்தரக்கன் வீழ்ந்து
ஆட்படக் கருதிப் புக்கார் அவளிவணல்லூராரே
(4)
நிலைவலம் வல்லனல்லன் நேர்மையை நினைய மாட்டான்
சிலைவலம் கொண்ட செல்வன் சீரிய கயிலை தன்னைத்
தலைவலம் கருதிப் புக்குத் தாக்கினான் தன்னை அன்று
அலைகுலை ஆக்குவித்தார் அவளிவணல்லூராரே
(5)
தவ்வலி ஒன்றனாகித் தனதொரு பெருமையாலே
மெய்வ்வலி உடையனென்று மிகப்பெரும் தேரையூர்ந்து
செவ்வலி கூர்விழியால் சிரம்பத்தால் எடுக்குற்றானை
அவ்வலி தீர்க்க வல்லார் அவளிவணல்லூராரே
(6)
நன்மை தான் அறிய மாட்டான் நடுவிலா அரக்கர் கோமான்
வன்மையே கருதிச் சென்று வலிதனைச் செலுத்தலுற்றுக்
கன்மையான் மலையைஓடிக் கருதித்தான் எடுத்து வாயால்
அம்மையோ என்ன வைத்தார் அவளிவணல்லூராரே
(7)
கதம்படப் போதுவார்கள் போதும்அக் கருத்தினாலே
சிதம்பட நின்ற நீர்கள் சிக்கெனத் தவிருமென்று
மதம்படு மனத்தனாகி வன்மையான் மிக்கு நோக்க
அதம்பழத்துருவு செய்தார் அவளிவணல்லூராரே
(8)
நாடு மிக்குழிதர்கின்ற நடுவிலா அரக்கர் கோனை
ஓடுமிக்கென்று சொல்லி ஊன்றினான் உகிரினாலே
பாடி மிக்குய்வன் என்று பணியநற் திறங்கள் காட்டி
ஆடுமிக்கரவம் பூண்டார் அவளிவணல்லூராரே
(9)
ஏனமாய் இடந்த மாலும், எழில்தரு முளரியானும்
ஞானம்தான் உடையராகி நன்மையை அறிய மாட்டார்
சேனம்தான் இலாஅரக்கன் செழுவரை எடுக்க ஊன்றி
ஆனந்த அருள்கள் செய்தார் அவளிவணல்லூராரே
(10)
ஊக்கினான் மலையை ஓடி உணர்விலா அரக்கன் தன்னைத்
தாக்கினான் விரலினாலே தலைபத்தும் தகர ஊன்றி
நோக்கினால் அஞ்சத் தன்னை நோன்பிற ஊன்று சொல்லி
ஆக்கினார் அமுதமாக அவளிவணல்லூராரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...
